அரசை கேள்வி கேட்டால் தானே ஓ.பி.எஸ் திட்டுவார்: அவரது பாராட்டைப் பெற இப்படி எழுதுகிறோம்...
சென்னை: மழை வெள்ளத்தில் தலைநகர் சென்னை மிதக்கும்போதும், டாஸ்மாக் மதுபான கடைகள் பக்காவாக திறந்து செயல்படுகின்றன. அந்த ஊழியர்களை அரசு, வெள்ள மீட்பு பணிக்கு பயன்படுத்தாமல் வைத்துள்ளது, குடிகாரர்களால் மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது, வெள்ளத்தில் இருந்து மீட்டு கூட்டிவரும்போது, மீட்பவர்களையும் சேர்த்து குடிகாரர்கள் தண்ணீரில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள் என்றெல்லாம், பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், அவர்கள் எல்லாம் தகுதியில்லாத தற்குறிகள்.. புலம்புவதும், குறைசொல்வதும்தான் அவர்கள் பிழைப்பு என்று, வாய் ஒருபக்கம் கோணிக்கோண்டே சென்றபோதும், தவட்டையை இழுத்து பிடித்து சரி செய்தபடி நம்மிடம் கருத்து கூறினார், வேளச்சேரியில் வெள்ளத்தில் மிதக்கும், குவாட்டர் கோவால்.
டாஸ்மாக்கை மூடமாட்டோம் என்று, அரசு சொன்னா மட்டும்தான் கேட்பீர்களா? நம்ம, குவாட்டர் கோவால், கூறும் கருத்துக்களையும்தான் கொஞ்சம் கேளுங்களேன்.

சின்சியரு சிகாமணிங்க
அப்டீ இன்னாயா பண்ணிச்சி இந்த கவுர்மென்டு உங்களுக்கு. எப்போபாரு, டாஸ்மாக் தொந்ருக்கு, கக்கூசு தொந்துருக்குன்னு ராவடி பண்றீங்கோ? அடாத மழையோடயும், விடாத வேல பாக்குற ஒரே ஸ்டாப்புங்க நம்ம டாஸ்மாக்கு ஸ்டாப்புங்கத்தான். அத்த எவ்னாவது பாராட்டுனீங்களாய்யா?

வெளியவும் தண்ணீ..
ஏய்யா.. வெளியே இம்மாம் பெரிய தண்ணி இஸ்துகுன்னு போச்சே, எவனாச்சும் அத்த போயி.. ஏ தண்ணீ.. தண்ணீ, ஏன் இப்படி புசுக்குன்னு வந்து இஸ்துகுன்னு போனன்னு கேட்டீங்களாய்யா.. வெளிய தண்ணி ஓடுது, உள்ள தண்ணீ ஓடக்கூடாதாய்யா.. நல்லா இருக்குய்யா ஒ நாயம்.

குளிருக்கு இதம்
மழன்னா, மழ பேய் மழய்யா. குளிருல ஓடம்பெல்லாம் வெரச்சிக்கின்னு நிக்குது. ஒரு போர்வ தரமுடியுமாய்யா ஒன்னால. குளிர்ல என்ன மாரி ஜனங்களுக்கு ஒன்னுக்கடக்க ஒன்னு ஆச்சின்னா, நீயா வந்து பாப்ப.. ஒரு குவாட்டர உள்ள உட்டுகுன்னா, சுனாமியே வந்தாலும், சும்மா ஜுவ்வுன்னு இருக்கும் தெர்யுமாய்யா உன்க்கு. குளிருல ஜனங்க பொட்டுன்னு போயிர கூடாதுன்னு, உசுர கூட ..சுரு மாதிரி மதிச்சி டாஸ்மாக்க தொறந்து வச்சி ஊத்திக்கொடுக்குறான்ய்யா.. அந்த நல்ல மன்சு ஒன்கு கஸ்க்குது.

உசுர காப்பாத்தும்
மழயில வூட்ல இருந்த பொருளெல்லாம் அடிச்சிகின்னு போயிடுச்சிய்யா. எலக்ஷென் வர்ற நேரத்துல கிடைச்ச அஞ்சி, பத்த வாங்கி சேர்த்து வச்ச பொருள்யா அவ்வளவும். மன்சு எவ்ளோ பேஜாரா கீது தெர்யுமாய்யா ஒனக்கு. நான்டுகின்னு செத்துபோலாம்போல இருக்குய்யா. அப்டி சோகத்துல இருக்கோசோல, ஒரு கட்டிங் போட்டுகின்னா, இன்னா நிம்தி தெர்யுமா..?

சட்டம்-ஒழுங்கு கெடாது
அர்சாங்கம் ஒதவி பண்ணல, பண்ணலன்னு கூவுறீங்கள, இந்த கோவமெல்லாம் ஒன்னா சேர்ந்தா இன்னா ஆவும் சொல்லு. ஒனக்கு தெரியாது, நானே சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. ஜனங்க மத்தில கொந்தளிப்பு வந்துரும். அங்கங்க போராட்டம், பொதுக்கூட்டமுன்னு ஆரம்பிசிடுவானுக. டாஸ்மாக்க தொர்ந்து வச்சிருந்தா, குடிச்சிகிட்டு, கம்முன்னு விழுந்து கிடப்பானுக. லான்ட்ஆர்டர் கெட்டுபோவாம காப்பாத்துர தெய்வம்யா, டாஸ்மாக்கு, அத்தப்போயி தப்பா பேசிகின்னு இருக்க நீயி.

மருந்து
கொஞ்சூண்டு மழ வேகமா பெஞ்சிகின்னாலே, மெடிக்கல் கடய மூடிகின்னு ஓடிருரானுக. தலவலி, காச்சலு, வவுத்துப்போக்கு, ஜல்தோசம் பிடிச்சி கெடக்குற ஜன்ங்க இன்னாய்யா பண்ண முடியும். ஒரு பாட்ல தொர்ந்து ஊத்திகின்னா, அத்தன சீக்கும், பஞ்சா பர்ந்து போயிரும். அது இன்னாவோ சொல்வாங்கள இன்னாப்பா... 'சர்வ ரோக நிவாரணி..' ஆங்.. அதான்பா. அந்த நிவாரணி இன்னான்னு நெனச்ச, டாஸ்மாக்குதான்.

உயிர காப்பாற்றுது
மில்ட்ரியோ, போலீசோ வூட்டுக்குள்ள மயங்கி கெடக்குற ஜனங்கள தேடிகின்னு வரச்சோல, எங்கள மாதிரி, குடிகாரன்தான்யா ஈசியா தப்பிப்பான். எப்டி சொல்லு..? ஒரு தபா தண்ணி ஊத்திகின்னா, 6 மணி நேரத்துக்காவது, எத்தாவது பொலம்பிகின்னு, பினாத்திகின்னே இருப்போம். சத்தம் கேட்டு சுலுவா, நாங்க இருக்குற இடத்துக்கு வந்து, காப்பாத்திருவாங்க. இதெல்லாம், ஒரு டெக்னிக்யா. சும்மா, 1 மணி நேர ஒன்னால புலம்ப முடியுமாய்யா. முடியாதுல்ல. அப்டி பாத்துகின்னா, டாஸ்மாக்தான்யா எங்களோட உசுரு காக்கும் தோழன்.












Click it and Unblock the Notifications