லோக்சபா தேர்தல்.. அம்மாவுக்கு பயந்து போட்டியிடாமல் பம்மும் தா.பாண்டியன்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் 'எப்படியாவது' 'எந்த தொகுதியிலாவது' போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் போட்டியிடாமலேயே பதுங்கிவிட்டார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தனர். அந்த அணியில் இரண்டு இடதுசாரிகட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிதான் ஒதுக்க அதிமுக முன்வந்தது.
ஆனால் இடதுசாரிகள் இதை ஏற்க மறுத்தனர். அதனால் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இடதுசாரிகளுடம் 'உடன்பாடு' ஏற்படாததால் அதிமுக அணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்தனர்.

இணைந்து போட்டி
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் இணைந்து 'தனித்துப்' போட்டியிட முடிவு செய்தன.

அதிமுக அணியில் வடசென்னைக்கு..
அதிமுக கூட்டணியில் இருந்த போது எப்படியாவது தமக்கு வடசென்னை தொகுதியை கேட்டுப் பெற்றுவிடுவது என்ற முடிவில் இருந்தார் தா. பாண்டியன்.

தா. பா. மீது கோபத்தில் இடதுசாரிகள்
தா. பாண்டியனின் இந்த காய் நகர்த்தலைக் கண்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளே கடும் கோபமடைந்தனர். ஆனால் தன் மகனுக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் பதிவாளர் போஸ்டிங் வாங்கியதைப் போல எப்படியாவது அதிமுக அணியில் வடசென்னையைப் பெற்றுவிடுவது என்பதில் பகீரத முயற்சிகளை மேற்கொண்டவராக இருந்தார் தா. பாண்டியன்.

கூப்பாடு போட்ட தா.பா.
ஆனால் கூட்டணி முறிந்த போது தா. பாண்டியனால் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டு கதறி அழ மட்டுமே முடிந்தது. மார்க்சியம் படித்த தா.பாண்டியனால் மகாபாரதம் பற்றி பேசிப் புலம்பத்தான் முடிந்தது. அதிமுக அணியில் வட சென்னைக்கு குறிவைத்துப் பார்த்த தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்த போது அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமலேயே இருந்துள்ளார்.

போட்டியிடவே மாட்டேன்
இதனால் வடசென்னை தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கும் விட்டுக் கொடுத்தார். இருந்தாலும் அசராத தா. பாண்டியன் அடிப்பொடிகள், அவரை ராமநாதபுரத்தில் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் எங்கே 'அம்மா' கோபித்துக் கொள்வாரோ என்ற விசுவாசத்தில் அதையும் நிராகரித்துவிட்டாராம் தா. பாண்டியன்.

எதிர்கால கூட்டணிக்காக..
எப்படியும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதிமுகவுடன் இணக்கமாக போக்கை கடைபிடித்தே ஆக வேண்டும் என்பதில் அடங்கா பற்றும் பெரும் பாசமும் கொண்டவராக இருக்கும் தா. பாண்டியன், அதற்கான வாய்ப்புகளில் ஒன்றைக் கூட நழுவ விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அதாவது அம்மாவின் கோபப் பார்வைக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே லோக்சபா தேர்தலில் போட்டியிடவே மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
காலம் மாறும்.. காட்சிகளும் மாறும் என்பதுதான் மிஸ்டர் தா.பா.வின் தற்போதைய கால்குலேஷன்!












Click it and Unblock the Notifications