இவர்களும் தப்பா பேசியவர்கள்தான்.. ஆனால் ஒரு நொடி கூட ஜெயிலுக்குப் போகாதவர்கள்!
சென்னை: அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும், நீதித்துறைக்கு எதிராகவும் மிகவும் மோசமாக, அநாகரீகமாக, ஆபாசமாக பேசியும் கூட சிறைக்குப் போகாதவர்கள் என்று ஒரு தனி பட்டியலே போடலாம்.
கருணாஸ் செய்த தவறுக்கு அவர் சிறைக்குப் போயுள்ளார். ஆனால் அவரைப் போலவே மோசமாக பேசிய பலர் சுதந்திரமாக, இன்னும் சொல்வதானால் போலீஸ் பாதுகாப்புடன் படு நிம்மதியாக உலா வருவது மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. என்ன மாதிரியான நிலைப்பாடு இது என்ற கேள்விகளையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
இரு தரப்பு பேசுகிறது. அதில் ஒரு தரப்பு மட்டும் கைது செய்யப்படுகிறது. இன்னொரு தரப்பு என்ன பேசினாலும் கைது செய்யப்படுவதில்லை. இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் என்று சத்தியமாக யாருக்கும் புரியவில்லை.

ஆண்மையற்றவர்கள்
எஸ்.குருமூர்த்தி முன்பு ஒரு டிவீட் போட்டார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று பகிரங்கமாகவே சாடியிருந்தார். ஆனால் குருமூர்த்தி மீது எந்த வழக்கும் பாயவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது பேச்சுக்காக குருமூர்த்தி வருந்தக் கூட இல்லை.

பெண்களை விமர்சித்த எஸ்.வி.சேகர்
இதேபோல காமெடி நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஒரு பதிவை ஷேர் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான பதிவு. அதைப் போட்டு விட்டு உடனே டெலிட் செய்த எஸ்.வி.சேகர் பின்னர் வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கோர்ட் உத்தரவிட்டும் கூட அவரை கைது செய்ய காவல்துறை ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக பலத்த பாதுகாப்புடன் இன்று வரை வளைய வருகிறார் எஸ்.வி.சேகர்.
நடு ரோட்டில் கழுவி ஊற்றிய எச். ராஜா
இன்னொருவர் எச். ராஜா. இவரும் பாஜகதான். இவரும் தமிழக காவல்துறையை கழுவி ஊற்றியவர்தான். திருமயத்தில் நடு ரோட்டில் நின்று கொண்டு காவல்துறையை மிகக் கேவலமாக திட்டினார், விமர்சித்தார். உச்சகட்டமாக, ஹைகோர்ட்டாவது ம..,. என்று கூறி அனைவரையும் பதற வைத்தார். இவர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இவரையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏன் இந்த பாரபட்சம்
போராடும் மக்களுக்குத் துப்பாக்கிக் குண்டு, போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் குண்டாஸ், ஊபா சட்டம், குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் என அரசு ஒரு பக்கம் கடுமையான முறையில் நடந்து கொள்கிறது. அதேசமயம், அதே அரசையும், காவல்துறையையும், நீதிமன்றத்தையும் ஒரு கும்பல் தொடர்ந்து எள்ளி நகையாடுகிறது. அதை அரசு கண்டுக்காமல் இருப்பது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications