கணவர் கழுத்தை நெரித்துக் கொலை.. நெஞ்சு வலியால் மரணம் என நாடகம்... கள்ளக்காதலனுடன் மனைவி கைது!
சென்னை: கள்ளக்காதல் மோகத்தில் கணவரின் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு, நெஞ்சு வலியால் செத்துப் போய்ட்டாரே என்று நாடகமாடிய மனைவி போலீஸார் அவரது கள்ளக்காதலனோடு சேர்த்துக் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் மோகத்தில் கொலைகள் நடப்பது தமிழகத்தின் கலாச்சாரம் போல மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு அப்பாவி இப்படி தினந்தோறும் செத்துக் கொண்டுதான் உள்ளார். அந்த வகையில் சென்னை நன்மங்கலம் பகுதியில் ஒரு கணவரை, தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்து கைதாகியுள்ளார் ஒரு மனைவி.
அந்தப் பாசக்கார மனைவியின் பெயர் அம்சரேகா. இவரது கணவர் சத்தியநாராயணன். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜி.பி.சாமி நகரில் வசித்து வந்தனர்.
செப்டம்பர் 22ம் தேதி சத்தியநாராயணன் இறந்து விட்டார். தனது கணவர் திடீரென நெஞ்சு வலி வந்து இறந்து போய் விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார் அம்சரேகா. குடும்பத்தினரிடமும் அதுபோலவே கூறியுள்ளார். ஆனால் தனது தம்பியின் இறுதிச் சடங்குக்காக வந்திருந்த சத்தியநாராயணனின் சகோதரி அஞ்சலை, தம்பியின் கழுத்தில் கழுத்தை நெரித்த தடம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் கழுத்து நெரிபட்டதால்தான் சத்தியநாராயணன் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அம்சரேகாவைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அதில், தானும், தனது கள்ளக்காதலன் ஆறுமுகமும் சேர்ந்துதான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் அம்சரேகா.
இந்த ஆறுமுகம் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். நைலான் கயிறால் இருவரும் சேர்ந்து சத்தியநாராயணனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். தங்களது காம விளையாட்டுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரைக் கொல்லும் முடிவை அம்சரேகா எடுத்துள்ளார். அதற்கு ஆறுமுகம் உதவியுள்ளார். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இப்போது சத்தியநாராயணின் இரு குழந்தைகளும் அனாதைகளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications