ஓபிஎஸ்ஸின் "7ம் தேதி புரட்சி".. இன்றோடு முடிவுக்கு வருகிறது?.. உற்சாகத்தில் அதிமுக!
சென்னை: அதிமுகவினர் திடீர் உற்சாகமடைந்துள்ளனர். எந்த அம்மா சமாதியில் கட்சி உடைந்ததோ அதே சமாதியில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவும் இணையப் போவதுதான் அவர்களது உற்சாகத்திற்குக் காரணம்.
கடந்த பிப்ரவரி 7ம் தேதி இரவு புதிய பன்னீர் செல்வத்தை ஒட்டுமொத்த தமிழகமும் கண்டது. அதுவரை அமைதியான பன்னீர் செல்வத்தை பார்த்த மக்களுக்கு புதிய பன்னீர் செல்வமாக மாறி, புரட்சித் தலைவராக மாறி சசிகலாவுக்கு எதிராக புரட்சி செய்தார் ஓ.பி.எஸ்.

அன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார் ஓபிஎஸ். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து திடீர் தியானம் செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். திடீர் தியானத்தில் குதித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தியானம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்களை சுமத்திப் பேசினார் ஓ.பி.எஸ். ஓ.பி.எஸ்ஸின் பேட்டியைத் தொடர்ந்து அதிமுக உடைந்தது. அதன் பின்னர் நடந்தது வரலாறு.
இன்று அதே சமாதியில் வைத்து இரு பிரிவு அதிமுகவும் இணையப் போகின்றனர். அதேசமயம், இரு பிரிவாக உடைந்த பின்னர் புதிதாக முளைத்த தினகரன் பிரிவு அதிமுக இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது. அது என்ன செய்யும் என்பது இனிமேல் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications