எங்களை அடக்க முடியாது.. பாஜக, திமுக புது சின்னத்தில் போட்டியிடுமா? நாம் தமிழர் சீமான் ஆவேச பேச்சு
அரக்கோணம்: புதிய சின்னத்தில் பாஜக போட்டியிடுமா?.. நாம் தமிழர் கட்சி போல.. பாஜக, திமுக, அதிமுக புதிய சின்னங்களுடன் தேர்தலில் போட்டியிட முடியுமா?.. என்று இன்று அரக்கோணத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான் கூறினார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்ற தொடங்கின. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அரக்கோணத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அரக்கோணம் தொகுதி வேட்பாளர் அப்சியா நஸ்ரினை ஆதரித்து வாக்கு சேகரித்தார். சீமான் கூறியதாவது:-
வரும் லோக்சபா தேர்தலில் 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே பதவி அதிகாரத்தில் இருந்து மக்களை ஆட்சி செய்தவர்கள். ஆனால் அந்த ஆட்சியாளர்கள் அவர்கள் செய்த ஒரு நன்மையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லையே?.. 10 ஆண்டுகால ஆட்சி செய்த பாஜக, இந்த பத்து ஆண்டுகளில் இவ்வளவு நலத்திட்டங்களை செய்திருக்கிறோம் என்று சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை.
புதிய சின்னத்தில் போட்டியிடுமா?: புதிய சின்னத்தில் பாஜக போட்டியிடுமா?.. நாம் தமிழர் கட்சி போல.. பாஜக, திமுக, அதிமுக புதிய சின்னங்களுடன் தேர்தலில் போட்டியிட முடியுமா?.. அடக்குமுறை, அழுத்தத்தினால் எங்களை அடக்கி வைக்க முடியாது. ஒற்றைக்கட்சி ஆட்சி முறையை ஒழிக்காமல், நாட்டில் கூட்டாட்சியை ஏற்படுத்த முடியாது.
காங்கிரஸ் ஆட்சியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் தான் பாஜக வெற்றி பெற்றது. நீட்டை நீக்குவோம்.. நீட்டை நீக்குவோம் என்று சொல்கிறார்கள்.. இப்போது நீட் கட்டாயமில்லை என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன் நீட்டை நடத்துவது யார்?.. அமெரிக்காவில் இருக்கின்ற ஒரு நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும். ஒரு தேர்வை கூட நடத்த முடியாத உங்களுக்கு தேர்தல் எதற்கு?..
அரசின் வேலை என்ன?: இவ்வளவு பெரிய நாட்டால் ஒரு தேர்வை கூட நடத்த முடியாவிட்டால் எப்படி?.. இந்திய நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனம் கடவுளிடம் வேண்டுதல் வைத்ததா? அவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தனியாருக்கு எடுத்து கொடுப்பதற்கே ஒரு அரசு ஒரு அதிகாரம் நிறுவப்படும் என்றால் அப்போது அரசின் வேலை என்ன?.. இந்த கேள்வி உங்களிடம் எழவில்லையா? ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை?
விவசாயியே கடனாளி ஆகிவிட்டால்: கல்வி என்பது மானுட உரிமை அல்லவா?.. அதை பெற்று தருவது அரசின் கடமை அல்லவா?.. ஏன் கொடுக்கவில்லை. மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வேன் என்று சொல்கிறார்கள். கடன் வாங்கி படிக்கும் நிலைக்கு ஏன் தள்ளினீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி?.. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள்.. ஒரு நாட்டில் விவசாயியே கடனாளி ஆகிவிட்டால், அந்த நாடு எப்படி உறுப்படும்..
ஒருமுறை போட்டு பாருங்கள் ஓட்டு: விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க ஒரு இடம் கிடையாது. நாட்டை குட்டிச்சவராக்கும் மதுபானங்களை பாதுகாக்க பாதுகாப்பான கட்டிடம், கண்காணிப்பு கேமிரா என பல வசதிகள். நெல்லை பாதுகாக்க வெறும் தார்ப்பாய் மட்டும் போட்டு மூடுகிறார்கள். காற்றில் தார்ப்பாய் பறந்து நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிடுகிறது.
எல்லாருக்கும் வாய்ப்பை கொடுத்துவிட்டீர்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பாருங்கள்.. "எங்களுக்கு ஒரு முறை போட்டு பாருங்கள் ஓட்டை.. அப்புறம் பாருங்க தமிழ்நாட்டை" இவ்வாறு சிமான் பேசினார்.












Click it and Unblock the Notifications