Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மீண்டும் மூழ்குமா? மழை வெள்ளம் வருமா? நீரியியல் நிபுணர் தரும் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு: சென்னை நகரத்தில் இருப்பதைப் போல மழைநீர் வடிகால் வசதி தெற்கு ஆசியாவிலேயே வேறு எந்த நகரத்திலும் இல்லை என்று நீரியியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் பெய்த அதிக மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது முதல் சென்னை மக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இந்த வருடமும் சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கிவிடுமா? என்ற பயம் அவர்களிடம் இயல்பாகவே எழுந்துள்ளது. இரண்டு நாட்கள் முன்னதாக பெய்த மழையில் குரோம்பேட்டை முடங்கிவிட்டது.

Chennai Chennai flood

மழையைக் கணித்துச் சொல்லக் கூடிய தன்னார்வலர்களும் இந்த ஆண்டு வெப்பம் நிலை அதிகம் இருந்ததால் மழையும் அதிகம் இருக்கும் என்று கூறிவருகிறார்கள். அரசாங்கம் கால்வாய்களை, மழை வெளியேறும் பாதைகளைச் சரி செய்து இருப்பதாகச் சொல்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, வெள்ள தடுப்பு ஆகிய திட்டங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் எம்ஐடிஎஸ் முன்னாள் இயக்குநரும் நீரியியல் நிபுணர் ஜனகராஜ் சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு என்ன நடக்கும்? மழை வெள்ளம் பற்றிப் பேசிய ஜனகராஜ், "எந்த நேரத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைச் சரியாக யாராலும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. ஆகவே மழைக்காலம் என்றால் இனிமேல் சென்னை மக்கள் ஜாக்கிரதையாக இருக்கப் பழகிக் கொள்வது நல்லது. வயநாட்டில் 600 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்து யாராவது சொன்னார்களா?

என்ன அலர்ட் கொடுத்தார்கள்? ஆரஞ்சு அலர்ட் கொடுத்தார்கள். அப்படி என்றால் 20 செமீட்டர் மழைவரை எதிர்பார்க்கலாம். அப்படி என்றால் 200 மி.மீட்டர் மழை வரை பெய்யலாம். ரெட் அலர்ட் என்றால் 300 மிமீட்டர் மழை வரை பெய்யும். ஆனால், வயநாட்டில் 600 மிமீட்டர் பெய்துள்ளதே? அது என்ன அலர்ட்?

தண்ணீர் பஞ்சம் வரும்போது மக்கள் என்ன செய்வார்கள்? குடத்தை வைத்துக் கொண்டு தண்ணீர் எப்போது கிடைக்கும் என அலர்ட் ஆக இருப்பார்கள். அதைப்போல மழை வரும்போது என்ன செய்ய வேண்டும்? தண்ணீரை எப்படிச் சேமிப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டும்? திட்டமிட வேண்டும்? ஆனால் மக்கள் என்ன செய்கிறார்கள்? எப்படியாவது கிடைக்கும் மழை நீரைக் கடலில் போய் கலந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. மழை நீரை முதலில் முடிந்தவரை மக்கள் நிலத்திற்குள் போகும்படி சேமிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு அதைச் செய்ய வேண்டும்.

நீர்நிலைகள் முழுமையாக இல்லை. பல இடங்களை ஆக்கிரமித்துவிட்டார்கள். ஏரி, குளம் எல்லாம் தூர்வாரப்படவில்லை. தன்னார்வலர்கள் செய்ய முன்வந்தால் அனுமதி தர மறுக்கிறார்கள். பிறகு எப்படி வெள்ளம் வராமல் தடுக்க முடியும்? தூர் எடுப்பதாகச் சொல்கிறார்கள். எங்கோ ஒன்று இரண்டு நடக்கிறது. அதுவும் முழுமையாக இல்லை. சென்னையைச் சுற்றி 4 ஆயிரம் ஏரிகள் அரசு ஆவணத்தில் உள்ளது. அவை முழுமையாக இருக்கின்றதா?

2015 வரலாறு காணாத வெள்ளம் என்றார்கள். 20 ஆயிரம் கோடி சேதம் என்றார்கள். அடுத்து 2016 வரலாறு காணாத வறட்சி வந்தது. ஏன் இது நடந்தது? வேளச்சேரியில் முதன்முதலாகக் குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள் கட்டப்பட்டன. இன்றைக்கு வேளச்சேரியில் எவ்வளவு வீடுகள் இருக்கின்றன? ஏரி பகுதியில் வீடு கட்ட அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஓடை, வாய்க்கால் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிறகு வெள்ளம் வந்தால் வேளச்சேரி மூழ்குமா இல்லையா? பள்ளிக்கரணையில் சதுப்புநிலம் 5,500 ஹெக்டர். இப்போது எவ்வளவு உள்ளது?

ஓட்டேரி, மாம்பலம்,விருகம்பாக்கம், வியாசர்பாடி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மீட்கப்பட வேண்டும். சில இடங்களில் அரசு செய்துள்ளது. முழுமையாக இன்னும் செய்யப்படவில்லை. அடுத்து கொசஸ்தலை, கூவம், அடையாறு, ஆரணி ஆறு, புலிகாட் ஆறு ஆகிய ஆறுகள் பழைய பரப்பளவில் இல்லை. அதை மறுபடியும் கொண்டுவர வேண்டும்.

இதைத்தாண்டி வடிகால் வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள மழைநீர் வடிகால் வசதியைப் போல தெற்கு ஆசியாவிலேயே கிடையாது. இதை மீறி மழை வெள்ளம் ஏன் வருகிறது? எங்கோ தவறுகள் நடந்துள்ளன. அதைச் சரி செய்யாமல் சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடியாது" என்கிறார் ஜனகராஜ்.

"ஒரு விசயத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அளவை மீறி மழை பெய்தால் வருவதற்குப் பெயர் வெள்ளம் இல்லை. அது நீர்த் தேக்கம். வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டதால் வந்த தேக்கம். சென்னையில் வருவது வெள்ளம் இல்லை. நீர் வெளியேற முடியாமல் ஏற்படும் தேக்கம். அது எங்கே நடக்கிறது? மாம்பலம், நுங்கம்பாக்கம், முடிச்சூர், வேளச்சேரி எனக் குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கிறது.

இவை அனைத்தும் ஏரி பகுதிகள். அங்கே மிகப் பிரம்மாண்டமான கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டன. அதனால் நீர் வழிப்பாதைகள் மாற்றப்பட்டுள்ளன. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைச் சரி செய்யாமல் வெள்ளம் எப்படிக் குறையும்? எப்போது ஆறுகள் நிரம்பி, இரு கரைகளிலும் நீர் வெளியேறுகிறதோ அதற்குப் பெயர்தான் வெள்ளம். அதைப் போன்று சென்னையில் நடந்ததா? ஆற்று நீர் ஊருக்குள் புகுந்ததா? இல்லையே?" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+