தேர்தலில் தோற்றாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: ஜி. ராமகிருஷ்ணன்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும் தமிழக மக்கள் நலனுக்காக, வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிட்டன. 18 தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளைச் சார்ந்த செயல் வீரர்கள் அர்ப்பணிப்போடு தேர்தல் பணியாற்றினர்.
முதலாளித்துவக் கட்சிகளுடைய பண பலத்தை எதிர்த்தும், பாஜகவினுடைய வகுப்புவாத அணுகுமுறையை எதிர்த்தும் மற்றும் சாதிய சக்திகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து அரசியலாக தேர்தலை சந்தித்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளில் பணியாற்றிய இரண்டு கட்சி அணிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த, ஆதரித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக மக்கள் நலனுக்காக, வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்பதை கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.