வானளாவிய அதிகாரம்.. பி.எச்.பாண்டியனாக மாறுவாரா ப.தனபால் அல்லது இறங்கி வருவாரா?
சென்னை: நீதித்துறைக்கும், சட்டசபைக்கும் இடையே ஒரு புதிய யுத்தம் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெற மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் சபாநாயகர் தனபால்.
இந்த நேரத்தில் நமக்கு பி.எச். பாண்டியன் நினைவுக்கு வருகிறார்...
1987ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் ஒரு அட்டைப் பட கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அது அப்போதைய ஆட்சியாளர்களைக் (எம்.ஜி.ஆர்) கோபப்படுத்தி விட்டது. சட்டசபையை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் அது. இதையடுத்து அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அனுப்பினார். பாலுவும் சட்டசபைக்கு சென்றார். அங்கு அவரை கூண்டில் ஏற்றினர். மன்னிப்பு கேட்கக் கோரினர். ஆனால் அந்தக் கார்ட்டூனை வரைந்தவரை முன்னிறுத்தி பலிகடாவாக்கி தப்பிக்க முனையாமல் அந்த கார்ட்டூனுக்கு நானே பொறுப்பேற்கிறேன், ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணிச்சலுடன் கூறி விட்டார் பாலு.

அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பாலுவை 3 மாதம் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பத்திரிகை உலகம் கொந்தளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்றம், பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அதை வாங்க மறுத்து விட்டார் பாண்டியன். மாறாக, நான் சட்டசபையின் சபாநாயகர், கோர்ட்டை விட வானளாவிய அதிகாரம் படைத்தவன் என்று அவர் முழங்கியது அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. கோர்ட், பாலுவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் பாலுவுக்கு ஆதரவாக திரண்டதைப் பார்த்த முதல்வர் எம்.ஜி.ஆர். இதில் தலையிட்டார். அவரை 3 நாளிலேயே சிறையிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இன்றும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு சூழல் உருவாகியுள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதைப் பெற்று விளக்கம் அளிப்பாரா சபாநாயகர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் மோதுவாரா அல்லது இறங்கி வருவாரா என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.












Click it and Unblock the Notifications