மக்களவைத் தேர்தல்: புதிதாக அமையும் எந்த அணியையும் வரவேற்போம்- கருணாநிதி
சென்னை: தேசிய அளவிலான 3வது அணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து திமுக செயற்குழு, பொதுக்குழுவில் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இன்றைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை போல இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் அது இலங்கையிலே உள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரிதும் ஆதரவாக அமையும்.

ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஏற்கனவே இந்த அரசின் சார்பில் தொடங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் இரட்டைஇலை சின்னம் பொறிக்கப்பட்டதைப்போல நேற்றைய தினம் முதல்வர் தொடங்கி வைத்த அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் எல்லாம் இரட்டை இலை சின்னம் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது பெரும் தவறு.
வரும் 30ம் தேதி 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்க டெல்லியில் கூடுகின்ற கூட்டத்திற்கு திமுகவுக்கு இதுவரையில் அழைப்பு வரவில்லை. இந்தியாவின் நன்மைக்காக எந்த அணி அமைந்தாலும் அந்த அணியை நான் வரவேற்கிறேன்.
3வது அணி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் அதைப்பற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி கலந்து பேசி முடிவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications