மறுபடியும் தொங்கும் மக்கள் நலக் கூட்டணி.. இந்த முறையாவது இறங்கி வருமா தேமுதிக?
சென்னை: தேமுதிகவை விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ஆனால் விஜயகாந்த் தரப்போ அதை மதிப்பதாகவே இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை விஜயகாந்த்தை நேரில் சந்திக்கப் போகிறார்களாம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.
தொடக்கத்திலிருந்தே விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்து வருகிறது மக்கள் நலக் கூட்டணி. ஆனால் அதைக் கண்டு கொள்ளவே இல்லை தேமுதிக.
திமுகவா, பாஜகவா என்று மாறி மாறிப் பேசி வந்தது. இரு தரப்பும் இவர்கள் இழுத்த இழுப்புக்கு ஒத்துவரவில்லை என்பதால் தனித்துப் போட்டி என்று அறிவித்தார் விஜயகாந்த். ஆனால் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம் என்று, விஜயகாந்த்தை மீறி அறிவித்து மக்களையும், கட்சிகளையும் குழப்பி விட்டுப் போனார் பிரேமலதா விஜயகாந்த்.

யாரும் சீந்தவில்லை
விஜயகாந்த், பிரேமலதாவின் இந்தக் குழப்பம் காரணமாக மக்கள் மத்தியில் தேமுதிகவின் பெயர் ரொம்பவே கெட்டுப் போய் விட்டது. மேலும் கட்சிகளும் அவர்களை இப்போது கண்டு கொள்வதாகவே இல்லை.

மீண்டும் அழைப்பு
இந்த நிலையில்தான் விஜயகாந்த்தை மீண்டும் சந்திக்கப் போவதாகவும், அவர் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணி கூறியுள்ளது.

நிர்வாகிகளைச் சந்திக்கிறார் விஜயகாந்த்
இந்த நிலையில் தனது கட்சி நிர்வாகிகளை சந்திக்கப் போகிறாராம் விஜயகாந்த். அடுத்த வாரம் மாநில நிர்வாகிகளை விஜயகாந்த் சந்திக்கவுள்ளார்.

நிர்வாகிகள் கோபம்
திமுகவுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு எந்த முடிவெடுத்தாலும் அது கட்சிக்கு நல்லதல்ல என்று தேமுதிக நிர்வாகிகள் கருதுகிறார்களாம். இதனால் விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.

மீண்டும் திமுக பக்கம் திரும்புமா?
இதனால் கூட்டணி குறித்துத் தீர்மானிக்க கட்சி நிர்வாகிகளை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார் விஜயகாந்த். அப்போது கூட்டணி குறித்த இறுதி நிலைப்பாட்டுக்கு அவர் வரலாம் என்று தெரிகிறது.

பிரேமலதாவை மீறி முடிவெடுப்பாரா?
விஜயகாந்த் சொல்வதுதான் இறுதி, அவர் சொல்வதுதான் முடிவு என்று பிரேமலதாவும், சுதீஷும் பேசி வந்தார்கள். அப்படிப் பார்த்தால் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் சொல்லியதுதான் இறுதி முடிவாக இருக்க முடியும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் விஜயகாந்த்தைத் தாண்டிய சக்திதான் தேமுதிகவை இயக்குவது போலத் தெரிகிறது. எனவே திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி வரும் பிரேமலதாவை முடிவை மீறி விஜயகாந்த் முடிவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பார்க்கலாம்...!












Click it and Unblock the Notifications