212 தொகுதிகளில் மக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் – திமுக தலைவராக அறிவிக்கப்படுவாரா?
சென்னை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை குமரியில் தொடங்கி திருவள்ளூர் வரை 212 தொகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். நான்காவது கட்டமாக, 17ம்தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் பயணம் செய்து மக்களை சந்தித்து குறைகேட்கப் போகிறார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ள திமுக, கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும் முன்னதாகவே தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது. அதே சுறுசுறுப்போடு மக்களை சந்திக்கப் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
குமரியில் தொடங்கி திருச்சி வரையிலும், நீலகிரி தொடங்கி கடலூர் வரையிலும் இரண்டு கட்ட பயணம் செய்த ஸ்டாலின் 3ம் கட்டமாக தனது சுற்றுப்பயணத்தை சேலத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கினார். திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்வரை சுற்றி வந்து திருத்தணியில் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

மாணவர்களுடன் சந்திப்பு
திருவள்ளூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாணவர்களை சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த இரண்டு மாதங்களாக இந்த நிகழ்ச்சியை நான் பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

234 தொகுதிகளில் பயணம்
நமக்கு நாமே பயணத்தில் மூன்றாவது கட்டத்தின் நிறைவாக இந்த மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நான்காவது கட்டமாக, 17ம்தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இத்துடன் 234 தொகுதிகளிலும், என்னுடைய பயணம் நிறைவு செய்ததாகி விடும்.

மிகப்பெரிய சாதனை
நேற்று வரை 206 தொகுதிகளில் நமக்கு நாமே பயணம் நடத்தியுள்ளேன். இன்று 6 தொகுதிகள். இதையும் சேர்த்து மொத்தம் 212 தொகுதிகளுக்கு சென்றுள்ளேன். இது தான் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

தமிழகத்தை காப்பற்ற பயணம்
இந்த பயணம் எதற்கு என்றால் நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காணொலி காட்சி ஆட்சி நடக்கிறது. நிர்வாகம் ஸ்தம்பித்து போய் விட்டது. அரசு துருப்பிடித்து இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டை காப்பாற்ற நல்ல மாற்றத்தை மாணவர்கள் உருவாக்கி தர வேண்டும். உங்களால் தான் மாற்றத்தை உருவாக்க முடியும். நான் எல்லா மாவட்டத்திலம் மாணவ, மாணவிகளை சந்தித்து வருகிறேன்.

வெளிப்படையாக பேசுங்கள்
உங்களது ஆலோசனை, அறிவுரை, எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை கூறுங்கள். எந்த நிலையில் ஆட்சி செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள். இதை சொன்னால் கோபம் வருமோ என்று எண்ணாமல் வெளிப்படையாக பேசுங்கள் என்றார்.

அச்சத்தில் அரசு
இந்த பயணத்தை பார்த்து அரசு இந்த அளவுக்கு அச்சப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. அவர்கள் கூறிய சாதனை எதுவும் செய்ததில்லை. நமக்கு நாமே பயணத்திற்கு அஞ்சி இது போல் செய்கின்றனர். 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையை விளம்பரம் பலகையாக வைத்துள்ளனர். ஆனால், அந்த விதியின் கீழ் கூறிய எந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

சொன்னதை செய்வோம்
ஆனால், நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்துள்ளோம். தொடர்ந்து செய்வோம். ஆட்சிக்கு வந்ததும், விளம்பரத்தை தவிர்த்து பணிகள் ஆற்றுவதில் அக்கறை காட்டுவோம். முறயைான வகையில் ஆட்சி நடைபெறும். கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்றார்.

மாற்றத்தை உருவாக்குங்கள்
மாணவர்கள் போராட்டம் நடத்தினால் அரசு அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். இந்த அரசு மாற்று திறனாளிகள் போராடினால் கூட அடித்து உதைத்து சுடுகாட்டில் கொண்டு போய் இறங்கி விடுகின்றனர். எனவே, இந்த நிலைக்கு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

மறைக்க முயற்சி
திமுக ஆட்சியில் நோய் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அரசு அப்படி எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் டெங்கு போன்ற நோய்கள் பரவுகிறது. மேலும், அதை மறைக்கவும் முயலுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயை கட்டுபடுத்த வேண்டும்.

கிடப்பில் போட்ட அரசு
திமுக ஆட்சியில் எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி தொடங்க திட்டம் தீட்டப்பட்டு, பெரம்பலூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி கட்ட நிதி ஒதுக்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதை கிடப்பில் போட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமல் அதிமுக அரசின் திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

சென்னையில் பயணம்
திருவள்ளூரில் மூன்றாம் கட்ட பயணத்தை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின் தனது நான்காம் கட்ட நடைபயணத்தை சென்னையில் 17ம்தேதி முதல் 20ம் தேதி வரை மேற்கொள்ள இருக்கிறார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதையாத்திரைக்கு பலன்
திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்று கோடிட்டு காட்டிவிட்டார். காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று திமுக வட்டாத தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications