ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை ஓயமாட்டேன்.. தொடர்ந்து போராடுவேன் - வைகோ ஆவேசம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை நான் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான் தான், அந்த ஆலையை மூடும் வரை நான் ஓயமாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, திமுகவின் மண்டல மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்த மத்திய அரசு அனைத்துவித முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது இதற்கான தீர்வு, இந்தப் பிரச்னை அரசியல் சாசன அமர்வுக்குச் சென்றால் தான் மாறும். எனவே அதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துவருகிறது. அந்த ஆலைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான் தான். அதற்காக நீதிமன்றம் வரை சென்றேன். அந்த ஆலையை மூடும் வரை போராடுவேன் என்றும், அதுவரை ஓயமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.