கருணாஸ் பதவி பறி போகுமா??
சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து கருணாஸ் எம்எல்ஏவின் பதவியையும் பறிக்க அதிமுக தரப்பு தீவிரமாக யோசித்த வருவதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய பரபரப்பு ஒன்று கிளம்பியுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் திருவாடானை தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்பட்டார். இவரது அரசியல் அறிமுகம், எம்எல்ஏ சீட் ஆகிய அனைத்துமே சசிகலாவின் கருணையால் கிடைத்தது என்று கூறப்படுகிறது.

கூவத்தூர் சேட்டைகள்
கூவத்தூரில் சசிகலா தனது எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் கொண்டு போய் வைத்து அடை காத்தபோது கருணாஸ்தான் பல முக்கிய வேலைகளைச் செய்து கொடுத்ததாக அப்போதே பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதல்வருக்கு எதிராக தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார் கருணாஸ். இது ஏதோ ஆரம்பத்திற்கான பிள்ளையார் சுழியாக அதிமுகவினரால் பார்க்கப்படுகிறது.

பின்னணியில் யார்
இது சசிகலா வேலையா அல்லது தினகரன் வேலையா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் கருணாஸுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பு தயாராகி விட்டதாம்.

கைது நடவடிக்கை
சமீபத்தில்தான் சிறைக்குப் போய் ஜாமீனில் திரும்பியுள்ளார் கருணாஸ். அவரைக் கைது செய்ய மாட்டார்கள் என்றுதான் ஆரம்பத்தில் கருணாஸ் தரப்பும், சசிகலா தரப்பும் நினைத்திருந்தது. ஆனால் அதிரடியாக தூக்கி உள்ளே போட்டதால் அதிர்ச்சி அடைந்தது கருணாஸ் தரப்பு.

பறி போகுமா பதவி
இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, கருணாஸின் எம்எல்ஏ பதவியை பறிக்கும் திட்டம் கையில் எடுக்கப்படவுள்ளதாம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பதால் சட்டப்படி கருணாஸும் அதிமுக எம்எல்ஏதான். எனவே முதல்வரையும், துணை முதல்வரையும் கடுமையாக தாக்கிப் பேசி வருவதால் இவரையும் தகுதி நீக்கம் செய்தால் என்ன என்ற யோசனை ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

வெடிகுண்டா.. புஸ்வாணமா!
இதுதொடர்பாக சபாநாயகர் தனபாலுடன் முக்கிய ஆலோசனையும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற எம்எல்ஏக்கள் வாயை மூடிக் கொண்டிருப்பார்கள் என்று அதிமுக தலைமை நம்புகிறதாம். கருணாஸ் வெடிகுண்டாக மாறுவாரா அல்லது புஸ்வாணமாகப் போவாரா என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரலாம்.












Click it and Unblock the Notifications