குஷ்புவை வைத்து இளங்கோவனுக்கு இக்கட்டை ஏற்படுத்த ஒரு குரூப் முயற்சி!
சென்னை: நடிகை குஷ்புவை வைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை டம்மியாக்க சிலர் ரகசியமாக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டிப் பூசல் குபீர் என வெடித்துக் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் என்றால் கோஷ்டி பூசல், மோதல், வேட்டி கிழிப்பு என்றுதான் நினைவுக்கு வரும். சமீபத்தில் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களோடு ஏரியாவைக் காலி செய்து விட்டுப் போனதால் இனிமேல் பெரிய அளவில் அடிதடி இருக்காது என்று கருதப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், இளங்கோவனும், அனைத்துக் கோஷ்டித் தலைவர்களுடனும் சுமூகமாக பழகி வருகிறார்.
ஆனால் தற்போது வேறு ரூபத்தில் கோஷ்டிப் பூசல் வெளிக் கிளம்பியுள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது இதுவரை நேரடியாக மோதி வந்ததை மாற்றி, புதிதாக கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு மூலமாக இளங்கோவனை டென்ஷனாக்க சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.
தற்போது புதிய மாவட்டத் தலைவர்களை நியமிக்கும் வேலை தொடங்கியுள்ளது. இதையடுத்து தங்களது பலத்தைப் பெருக்கிக் கொள்ள ப.சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என அனைத்துக் கோஷ்டிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனவாம்.
மேலும் இளங்கோவனுக்கு டென்ஷன் கொடுக்கும் வகையில், குஷ்புவுக்கு முக்கியப் பதவியைத் தர வேண்டும் என்று சிலர் டெல்லி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனராம். அதாவது செயல் தலைவர் போன்ற முக்கியப் பதவியைக் கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று அவர்கள் தூபம் போடுகிறார்களாம். இப்படி செய்வதன் மூலம் இளங்கோவனின் முக்கியத்துவத்தை குறைக்க முடியும் என்பது அவர்களது திட்டம்.
குஷ்புவும் கூட தனக்கு கட்சியில் முக்கியப் பதவி வேண்டும் என்று மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளாராம். அவருக்கு எந்தப் பதவி தரப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் செயல் தலைவர் பதவியை எப்படியாது குஷ்புவுக்கு வாங்கித் தர சிலர் தீவிரமாக முயன்று வருகின்றனராம்.
ஏற்கனவே சோ.பாலகிருஷ்ணன் தலைவராக இருந்தபோது செயல் தலைவராக இளங்கோவனை நியமித்தனர். இளங்கோவனும், சோ.பாவுக்கு செம குடைச்சலாக செயல்பட்டு வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பா்க்கலாம் குஷ்பு இந்த சதி வலையில சிக்குவாரா அல்லது தப்புவாரா என்பதை.