ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஜெயலலிதா VS குஷ்பு! ஜெ. கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளராகிறார் குஷ்பு?
ஸ்ரீரங்கம்: நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதனால், அவர் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் இழந்தார்.இதையடுத்து, காலியான ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம், 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

திமுக வேட்பாளர் ஆனந்த்
இந்தத் தேர்தலில், தி.மு.க., சார்பில், ஏற்கனவே, 2011 தேர்தலில், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட, ஆனந்த் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், காங்கிரசும், பா.ஜ.,வும், இந்த இடைத்தேர்தலில் களமிறங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

பாஜகவுக்குள் குழப்பம்
இருப்பினும், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில், அந்தக் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பம் நீடித்தால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பா.ஜ., விலகிக் கொண்டு, கூட்டணி கட்சிகளான பா.ம.க.,வுக்கோ அல்லது தே.மு.தி.க.,வுக்கோ தொகுதியை விட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக, நாளை தமிழகம் வருகிறார். அப்போது, வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படலாம். இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

களமிறங்கும் குஷ்பு
இதற்கிடையில், ஸ்ரீரங்கம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, நடிகை குஷ்பு களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கட்சி மேலிடம் உத்தரவிட்டால், போட்டியிட தயார் என, குஷ்புவும் அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த பொங்கல் விழாவில் காங்கிரஸ் மகளிர் அணியினர், பொங்கல் வைத்து படையல் போட்டனர்.

சொன்னால் ஏற்பேன்...
இதில் பங்கேற்ற குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக, நான் போட்டியிடப் போவதாக செய்தி பரவி இருக்கிறது. அதுபற்றி, எனக்கு எதுவும் தெரியாது. தமிழக காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுத்து, போட்டியிட சொன்னால் மறுக்க மாட்டேன். சந்தோஷமாக அதை ஏற்றுக் கொள்வேன். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

ஜெயலலிதாவா? குஷ்புவா?
ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்பு ஒரு பெண் தலைவராக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதாவின் கோட்டையான ஸ்ரீரங்கத்தில் குஷ்புவை களமிறக்குவதன் மூலம் ஜெயலலிதாவா-குஷ்புவா என்ற பலப்பரிட்சைக்கு ஸ்ரீரங்கம் சாட்சியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஸ்ரீரங்கத்தில் குஷ்பு போட்டியிட்டு வெற்றி பெற்றாலோ அல்லது கணிசமான வாக்குகளை பெற்றுவிட்டாலோ, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு அது மிகப்பெரிய மைலேஜை தரும் என்று கூற முடியும்.












Click it and Unblock the Notifications