கேட்டது கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம்: அதிமுகவுக்கு பார்வர்டு பிளாக் எச்சரிக்கை
தேனி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேட்ட தொகுதியை தங்களுக்கு ஒதுக்காவிட்டால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளோடு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதே போன்று எங்களுடனும் உடன்பாடு வைத்து ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம். இந்த கோரிக்கையை வைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நாங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறோம். நாங்கள் கேட்டதை அவர்கள் அளித்தால் மகிழ்வோம். இல்லை என்றால் சிங்கம் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கிறது என்றார்.