காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்!
தூத்துக்குடி: "தூத்துக்குடியை காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்" என்ற திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அதிரடி சபதம், தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிக இடங்களில் வென்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், திமுக மூத்த நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த ஆவேசப் பேச்சு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

தேர்தல் தோல்வி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் முதல் கட்சியாக ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, 5 எம்.எல்.ஏக்களுடன் சென்று விஜய் முதலமைச்சராக ஆதரவு கொடுத்ததோடு தவெக கூட்டணியிலும் இணைந்தது காங்கிரஸ் கட்சி.
தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி மறைமுக கூட்டணி அமைத்ததும், காங்கிரஸின் வாக்குகள் தவெக-விற்கு சாதகமாக மாறியதுமே பல இடங்களில் திமுக தோல்விக்கு முக்கியக் காரணம் என திமுக தொண்டர்கள் கடுமையாக நம்புகின்றனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்
இந்நிலையில், துாத்துக்குடியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், துாத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் ஒருமையில் விமர்சித்தார்.
அதற்கு 'அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், திமுகவுக்கு பதிலடி தரப்படும்' என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக்குவேன் - சபதம்
இதையடுத்து, கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால்தான் தங்களுக்கு இந்தத் நிலை ஏற்பட்டது என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். "கடந்த காலங்களில் திமுகவின் தோளில் ஏறி சவாரி செய்து, நம்முடைய உழைப்பால் தூத்துக்குடியில் வார்டு கவுன்சிலர்கள் முதல் முக்கியப் பதவிகள் வரை காங்கிரஸ் கட்சியினர் அனுபவித்தார்கள்.
ஆனால், இந்தத் தேர்தலில் நமக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டார்கள். இனி வரும் காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு அரசியல் அங்கீகாரமும் கிடைக்காதவாறு செய்வேன். தூத்துக்குடியை 'காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக' மாற்றுவதே என் முதல் வேலை" என சபதம் எடுத்தார்.
கட்சி தாவிய தலைகள்
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தச் சபதம் வெறும் பேச்சோடு நின்றுவிடவில்லை. அதன் எதிரொலி உடனடியாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. துாத்துக்குடி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் ஒன்றிய தலைவர் பிச்சுவிளை சுதாகர் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட, 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை, திமுகவுக்கு இழுத்துள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி மாவட்டம் என்பது பாரம்பரியமாக திமுகவின் மிக பலமான கோட்டையாக, மறைந்த என். பெரியசாமி மற்றும் அவரது மகளான கீதா ஜீவன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், 2026 தேர்தல் முடிவுகள் இக்கோட்டையை அசைத்துப் பார்த்துள்ளன. தவெக தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் போன்ற தொகுதிகளைக் கைப்பற்றி, மாவட்டத்திற்குள் மிக பலமாக கால்பதித்துள்ளது.
தூத்துக்குடி திமுக
காங்கிரஸ் கட்சி தவெக-வின் புதிய அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தாலும், உள்ளூர் அளவில் திமுகவின் நேரடிப் பகையைச் சம்பாதித்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த வெளிப்படையான சவால், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். தூத்துக்குடியில் இனி காங்கிரஸுடன் எந்தவொரு சமரசமும் இல்லை என்பதை திமுக தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது.
அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்களை மனதில் வைத்து, மாவட்டத்தில் காங்கிரஸை முழுமையாகத் தனிமைப்படுத்தி, தூத்துக்குடியை திமுகவின் ஒற்றை ஆதிக்கக் கோட்டையாக மாற்ற அவர் இப்போதிருந்தே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டார் அனிதா ராதாகிருஷன் என்பதைத்தான் அவரது இந்தச் சபதம் உணர்த்துகிறது.
விஜய்யின் தவெக மற்றும் காங்கிரஸின் கூட்டணி பலத்தை உடைத்து, தூத்துக்குடியை மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திமுக இப்போதிருந்தே வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது. அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த 'காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி' சபதம் நிறைவேறுமா அல்லது தவெக - காங்கிரஸ் கூட்டணி தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications