ஸ்டாலினை சந்தித்தது ஏன்? த.மா.கா தலைவர் வாசன் பேட்டி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை அவரின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் வைத்து சந்தித்து அரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் வாசன் கூறியதாவது: நீண்ட காலத்திற்கு பிறகு ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாக சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளேன்.
தமிழகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்டாலினுடன் விவாதித்தேன், என்றார், வாசன். இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்கப்பட்டதா என்ற நிருபர்களின் கேள்விக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில், திமுக பொருளாளரை சந்தித்துள்ளேன் எனும்போதே, அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு வாசன் பதிலளித்தார்.
கூட்டணி பற்றிய பேச்சுக்கு நேரடியாக வாசன் பதிலளிக்கவில்லை என்றபோதிலும் சூசகமாக கூட்டணி பற்றி பேசயதாக வாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.