சட்டசபை தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கமும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணியா? சீமான் விளக்கம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று நான் சொல்லவில்லை என்று தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் சீமான். மேலும், 2016ல் ஆட்சியை பிடிக்க போவது நாம் தமிழர் கட்சிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாரம் இருமுறை வெளியாகும் 'நக்கீரன்' இதழுக்கு சீமான் அளித்துள்ள பேட்டி:
தமிழினத்தளத்திலும் பொதுத்தளத்திலும் எங்கள் குரல் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது; நாம் தமிழரின் போராட்டங்கள் வலுத்துக் கொண்டு தானிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டிருக்கின்றன.

பாஜவுக்கு பரம்பரை பகை
ராஜீவ்காந்தியை படுகொலை செய்தார்கள் என்பதாகக் கருதிக்கொண்டு தமிழர்கள் மீது காங்கிரஸ்க்கு கோபம். ஆனால், தமிழர்கள் மீது பா.ஜ.க.விடம் இருப்பது பரம்பரை பகை. சிங்களவனை ஆரியனாகவே வரித்துக்கொண்டிருக்கிற இயக்கம் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.சும். "சிங்களவன் ராமனின் வம்சாவளியினர். தமிழர்கள் ராவணனின் வம்சாவழியினர்' என்கிறார் அத்வானி.

தமிழகத்தில் விடமாட்டோம்
காங்கிரஸின் கொள் கையை பின்பற்றுகிறது என்று சொல்வதை விட, பா.ஜ.க.வின் கொள்கையும் கோட்பாடுமே அதுதான். இதை உணர்ந்துதான் பா.ஜ.க.வை ஆதரிக்கும் தமிழ் சக்திகளிடம், "அதன் பின்னால் போகாதீர்கள். ஆபத்தானது' என்று வலியுறுத்தினேன். கேட்க வில்லை. இப்போ பா.ஜ.க.வின் சுயரூபத்தை உணர்ந்து விலகி நிற்கிறார்கள்.
மத்தியில் ஆட்சி யைப் பிடித்துவிட்டோம் என்கிற அதிகார போதையில் சட்ட மன்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. முயற்சிக் கும். ஆனால், அதனை முறியடிப்பார்கள் நாம் தமிழர்கள்.

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி
இரண்டு பெரிய திரா விடக் கட்சிகள் ஊதி பெருத்து நிற்கிறது. இதை ஊடறுத்து வெற்றிகொள்வது பெரிய சுமைதான். ஆனால், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். சாதியால் பிளந்து கிடக்கும் தமிழ் தேசிய இனத்தில், சாதிக்கும் சாமிக்கும் மதத்திற்குமென எது, எதற்கெல்லாமோ இங்கு வாக்கு வங்கி இருக்கிறது. ஆனா, மொழிக்கும் இனத்துக்கும் வாக்கு வங்கி இல்லை. அதை வரும் தேர்தலில் உருவாக்கு வோம். "சிறகை விரி; பிறகு சிரி' என்பார் அய்யா காசி ஆனந்தன். கடுமையான செயல் திட்டத்தை வகுத்துக்கொண்டு 2016-ல் சிறகை விரிப்போம். பிறகு சிரிப்போம்.
தன்னலம் சார்ந்த கொடுமையான சர்வாதிகார ஆட்சி முறைதான் இங்கு இருக்கிறது. ஆனா, தூய்மையான அரசியலை மையப்படுத்தும் அன்பான சர்வாதிகார ஆட்சி முறை தேவைப்படுகிறது.

கூட்டணி... தனித்து போட்டி...
ஒத்த சிந்தனையுள்ளவர் களை ஒன்றிணைப்பதில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும். குறிப்பாக, இடதுசாரிகளை வரவேற்போம். மார்க்ஸிஸ்ட்டுகளிடம் இருக்கும் ஒரே பிரச்சினை ஈழவிடுதலை எதிர்ப்புதான். அதை அவர்கள் பரிசீலித்தால் தேசிய அளவில் இடதுசாரிகளையும் தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களான நாம் தமிழர் கட்சியையும் முன்னிறுத்துவோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஒன்றிணையாத பட் சத்தில் 234லும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். அதற்கான புலிப்பாய்ச்சலை இப்போதே துவக்கிவிட்டோம்.

இலை மலர்ந்தும் ஈழம் மலரவில்லையே?
"தனிஈழம் தவிர இலங்கை இனச்சிக்கலுக்கு வேறு தீர்வு என்ன இருக்கமுடியும்?' என்று நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசினார் ஜெயலலிதா. அப்போது எழுந்த கரவொலி அசாத்தியமானது. இதனையடுத்து அதே நெல்லையில் நான் பேசியபோது, "எத்தனையோ அறிவிப்புகளை செய்து பலமான கரவொலியை பெற்றிருப்பீர்கள். ஆனால், அந்த அத்தனை கரவொலியையும்விட அதிகமாக எழுந்தது ஈழம் என்று நீங்கள் சொன்ன ஒற்றை வார்த் தைக்குத்தான். அதனால் அதில் அவர் உறுதியாக இருக்க வேண்டும்' என வலியுறுத்தினேன். இந்த கருத்து பொதுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் தேவைப் பட்டது. அதனால்தான் அதனை மையப்படுத்தி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றேன்.

விஜய்க்கு ஆர்வம் இருந்தால் வரட்டும்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகம் காப்பாற்றப்படும்னு எங்குமே நான் சொல்லவில்லை. நான் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்பியிருக்கிறேன். அப்படியிருக்க, விஜய்யால்தான் தமிழகம் காப்பாற்றப்படும் என்று எப்படி சொல்லியிருப்பேன்? அரசியலுக்கு வரும் ஆர்வம் விஜய்க்கு இருந்தால் அவர் வரவேண்டும்' என்று முன்பு ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அதேதான் இப்போதும்.

விஜய்-சீமான் கூட்டணி?
விஜய் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. முதலில் வெளிப்படையாக அவர் அரசியலுக்கு வரட்டும். நாங்களும் அவரும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து பயணிக்க முடியுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். இப்போதைக்கு அவருக்கான அரசியல் அவருக்கு. எங்களுக்கான அரசியல் எங்களுக்கு.

தமிழர் தேசிய முன்னணியில் ஏன் இணையவில்லை?
அய்யா நெடுமாறன் இப்போதுதான் அரசியல் கட்சியை துவக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே நான் துவக்கி விட்டேன். 2009லேயே இவர் கட்சி ஆரம்பித்திருந்தால் எங்களுக்கு அரசியல் கட்சி துவங்கும் வேலை வந்திருக்காது. காலம் கடந்து அவர் துவங்கியுள்ள நிலையில், எங்களின் கொடியை கீழே போட்டுவிட்டு அவரது கொடியை தூக்க எங்களால் முடியாது.












Click it and Unblock the Notifications