துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் இரண்டு அமைதிப் புறாக்கள்....!
சென்னை: துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் எல்லையில் அனல் பறக்கும் சண்டைக்கு மத்தியில், குண்டு மழைக்கு மத்தியில்... இரண்டு அமைதிப் புறாக்களை கொண்டு வந்து உட்கார வைத்துள்ளது நார்வேயின் நோபல் பரிசுக் குழு!
மிக மிக வினோதமான காட்சி இது. இதுவரை வரலாறு காணாத காட்சியும் கூட. இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் கட்டி உருண்டு கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தானுக்கு இந்த அமைதிப் பரிசு நிச்சயம் சம்மட்டி அடியாகத்தான் அமையும். குறிப்பாக அமைதியை விரும்பாத பாகிஸ்தானை நிச்சயம் வெட்கப் பட வைக்கும்.
சிறார்களின் கல்வி உரிமைக்காக போராடிய மலாலா
பாகிஸ்தானின் மலாலாவின் தீரம்.. மிக மிக துணிச்சலானது. தீவிரவாதிகளுக்கு எதிராக நிமிர்ந்து நின்று குரல் கொடுத்தற்காக தலையில் துப்பாக்கிக் குண்டை வாங்கிய வீரச் சிறுமி மலாலா.
சிறார்களின் வாழ்வுரிமைக்காக போரிட்ட கைலாஷ்
மறுபக்கம் கைலாஷ் சத்யார்த்தியோ, சிறார்களின் வாழ்வுரிமைக்காக போராட்டு வருபவர். குழந்தைத் தொழிலாளர் முறை அறவே இருக்கக் கூடாது என்று போராடி வரும் போராளி. ஆயிரமாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு புது வாழ்க்கை தேடிக் கொடுத்தவர்.
பெண் உரிமைக்காக போராடிய மலாலா
பெண் குழந்தைகள் படிக்கக் கூடாது, பள்ளிக் கூடம் போகக் கூடாது என்று பத்தாம் பசலித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது மலாலாவின் குற்றம். அவருக்குக் கிடைத்த பரிசு குண்டடி.
கைலாஷுக்கு கிடைத்த அடி உதை
மறுபக்கம் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு முயற்சியின்போது கைலாஷ் படாத அடியே கிடையாது. எத்தனையோ முறை கொலை மிரட்டல்களுக்குள்ளானவர் கைலாஷ்.
இரு நாடுகளின் அமைதி எங்கே
இந்த இரு போராளிகளுக்கும், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த நிஜமான புரட்சியாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது மிக மிகப் பொருத்தமானது. ஆனால் இரு நாடுகளும் இன்று அமைதி எங்கே என்று தேடித் திரியும் நிலையில் இருப்பது விசித்திரமானது.
எல்லையில் தொடர்ந்து தொல்லை தரும் பாகிஸ்தான்
இந்தியா எவ்வளவுதான் இறங்கிப் போனாலும், தொடர்ந்து மேலே மேலே ஏறிக் கொண்டுதான் போகிறது பாகிஸ்தான்.
அத்துமீறல்கள், அராஜகத் தாக்குதல்கள்
இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது. அத்துமீறல்களையும், அராஜகத் தாக்குதல்களையும் தொடர்ந்தபடியே உள்ளது.
ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக் கொள்வோமா...!
பைபிளில் ஒரு வாசகம் உண்டு - ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக் கொள்வோம் என்று. அதை மலாலா, கைலாஷ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்துள்ள இந்த தருணத்தில் இரு நாடுகளும் சொல்லிக் கொண்டு, நார்வே நோபல் பரிசுக் குழு கொண்டு வந்து வைத்துள்ள அந்த இரு அமைதிப் புறாக்களையும் அன்போடு தொட்டுத் தழுவி அமைதிக் கொடியை பறக்க விட முன் வருமா பாகிஸ்தான்....?