சசிகலாவின் சீராய்வு மனு தண்டனையை தளர்த்துமா.. சட்டம் என்ன சொல்கிறது?
சசிகலாவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தண்டனையில் எந்த மாற்றமும் இருக்காது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமித்வராய் ஆகியோர் ஜெயலலிதாவை இறந்துவிட்ட காரணத்தினால் வழக்கிலிருந்து விடுவித்தும் சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கும் செப்டம்பர் 2014ல் வழங்கப்பட்ட தனி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
இதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா அரசு ஊழியராக இருந்ததை வைத்தே வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் இறந்து விட்ட காரணத்தால் வழக்கும் முடிவுக்கு வரும் என்றும் சசிகலா தரப்பில் வாதங்கள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன.

வலுவில்லை
இந்த சீராய்வு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் அப்பீல் அமைப்பு முறையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 99 சதவீதம் இறுதியானது. இந்த வழக்கை பொருத்த வரை மனுதாரர் தரப்பில் வலுவான காரணங்கள் இல்லை.

தள்ளுபடி தான் செய்யப்படும்
சீராய்வு மனுக்களை பொதுவாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காது, அப்படியே எடுத்தாலும் அது தள்ளுபடியே செய்யப்படும். மேலும் வழக்கறிஞரின் பங்கு என்பதே மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் எந்த வாதமும் இருக்காது.

ஏற்கனவே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்படும் முக்கிய காரணமே முக்கிய குற்றவாளி அரசுப் பணியாளர் என்றும் அவர் இறந்து விட்டதால் மற்றவர்களுக்கு தண்டனை பொருந்தாது என்று கூறுகிறார்கள். ஆனால் ஊழல் புகாரில் அரசுப் பணியாளருக்கு மட்டுமே தண்டனை என்றாலும் இதர குற்றச்சாட்டுகளில் சசிகலா உள்ளிட்ட இதர குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பை உறுதி செய்துள்ளதே சான்றாக உள்ளது.

குற்றவாளியின் முயற்சி
எனினும் குற்றவாளி என்ற முறையில் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். ஆனால் இப்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உறுதியான காரணமும் இல்லாததால் சீராய்வு மனு தள்ளுபடி செய்யவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குற்றவாளி சசிகலா சட்டத்தை வளைக்க எல்லாமே செய்கிறார் என்பது அண்மையில் பெங்களூரு சிறைச்சாலையில் வெளியான காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. இந்நிலையில் சசிகலாவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்த நிலையில் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications