சீமான், சரத் புதிய கூட்டணி?... மதுரையில் கூட்டாக நிருபர்களை சந்தித்ததால் எதிர்பார்ப்பு
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்திருப்பது புதிய கூட்டணி உருவாகிறதா என்ற கேள
Recommended Video
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் மதுரை விமான நிலையத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றனர். இவர்களின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு இருவர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் கூறியதாவது : உயிர் காக்கும் மருத்துவம், அறிவு வளர்க்கும் கல்வி, ஆதாரமாக இருக்கும் நீர், போக்குவரத்து எல்லாமே தனியார்மயப்படுத்தப்பட்டு விட்டது.
மருத்துவத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டு காப்பீடு தருவேன் என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா? எல்லாமே தனியாரிடம் கொடுத்துவிட்டார்கள், கல்வி நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்துவிட்டு பேருந்து கட்டணத்துக்கான பாஸை இலவசமாகத் தருகிறோம் என்பது எவ்வளவு வேடிக்கையோ அது மாதிரித் தான் இதுவும்.
பட்ஜெட் அறிவிப்புகள் நிறைவேறுமா?
மின்னணு பொருட்களுக்கு வரி குறைக்கவில்லை, அதில் வரும் திருகுக்கு வரிஇல்லை என்ற சொல்கிறார்கள். இதை படிக்கும் போதே சிரிப்பாக இருக்கிறது. 120 கோடி மக்களில் 10 கோடி மக்களுக்கு மட்டும் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ வசதிகள் கிடைத்தால் போதுமா? 10 கோடி மக்களில் எதந்த தரப்பினருக்கும் அது போகும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்ற முடியுமா? அப்படி நிறைவேற்ற வேண்டுமென்றால் அடுத்த முறை வாய்ப்பளியுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவா இந்த பட்ஜெட். அதற்காகத் தான் இது பயன்படும் மற்றபடி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார்.
நடைமுறையில் சாத்தியமா?
சரத்குமார் கூறியதாவது : மருத்துவ காப்பீட்டுக்கு ரூ. 5 லட்சம் என்று சொல்கிறார்கள், இதை நடைமுறைப்படுத்துவார்களா என்பது தான் கேள்வி. சொல்வதற்கு எல்லாமே சுலபமாக இருக்கலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா என்பதை தான் சொல்ல வேண்டும்.
சாமானிய மக்களுக்கான பட்ஜெட் போல அறிவித்துவிட்டு, ஆனால் இது சாமானிய மக்களை சென்று அடையுமா என்ற ஐயப்பாடு தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 11 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை எப்படி தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
சாமானிய மக்களுக்கு பயனில்லை
மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை ஒன்றரை ஆண்டுக்குள் செயல்படுத்தி முடிக்க முடியுமா? ரயில்வேக்கு ஒட்டுமொத்தமாக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள், ஆனால் குறிப்பாக அந்த நிதி எந்த மாநிலத்திற்கு எந்த வழித்தடத்திற்கு என்பதெல்லாம் விளக்கப்படவில்லை.
எதுவுமே முழுமைப்படுத்தப்படாமல் இருக்கிறது இந்த பட்ஜெட்டில். சாமானிய மக்களுக்கு பயன்படும் பட்ஜெட்டாக இருந்தாலும் இது மக்களுக்கு பயன் அளிக்காது என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.
ரஜினி, கமலை எதிர்க்கும் சீமான், சரத்
பேட்டியின் முடிவில் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்துக்கு எதிராக சீமானும், சரத்குமாரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தை ஆள தமிழகர்கள் இருக்கிறார்கள் ரஜினி தலைமை பொறுப்பிற்கு வரத் தேவையில்லை என்று சீமான் கூறி வருகிறார். காவிரி விவகாரத்தில் ரஜினியின் பதில் என்ன அண்மையில் சரத்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதே போன்று சீமானும், சரத்குமாரும் பாஜகவிற்கு எதிரான கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
புதிய கூட்டணி உருவாகிறதா?
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் அதன் பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த போதும் சரத்குமார் இதுவரை தனித்தே செயல்பட்டு வருகிறார். சீமானும் நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து தனித்து செயல்பட்டு வருகிறார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் உள்பட அடுத்தடுத்து தேர்தல்கள் தமிழகத்தில் வரிசை கட்ட உள்ள நிலையில் சீமானும், சரத்குமாரும் இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை இவர்கள் இணைந்தால் அந்த கூட்டணி வலுப்பெறுமா?