உச்சநீதிமன்றம் கண்டிக்கிறதே.. தமிழகத்தில் நாளை பந்த் நடக்குமா?
சென்னை: காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, 'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு, திமுக - பாமக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு அளித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், பந்த், வன்முறைகளுக்கு எதிராக சிவகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த தீபக் மிஸ்ரா, லலித் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பந்த் நடத்துவது கூடாது என்று கறாராக கூறியுள்ளது.
வன்முறைகளில் இறங்குவது, பிறர் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கூடாது என்றும், சுப்ரீம் கோர்ட் வலுவாக கருத்தை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நாளை தமிழகத்தில் திட்டமிட்டபடி பந்த் நடைபெறுமா, அவ்வாறு நடைபெற்றால் அது கோர்ட் உத்தரவை மீறியது போலாகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கேட்டபோது, சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்த உத்தரவு கோர்ட் உத்தரவுகளுக்கு எதிராக பந்த் நடத்தக்கூடாது என்பதுதான். உதாரணத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்ததை கண்டித்து கர்நாடகாவில் நடத்தப்பட்ட பந்த்துக்கு இது பொருந்தும். ஏனெனில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதே சுப்ரீம் கோர்ட்தான்.
அதேநேரம், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு கடையடைப்பு என்பது கர்நாடகாவில், தமிழர்கள் மீதான வன்முறையை கண்டித்து நடத்தப்படுவது. எனவே, இது சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய உத்தரவை மீறுவதாகாது. அதேநேரம், பந்த் நடத்துவது சட்ட விரோதம் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் மற்ற சில வழக்கு விசாரணைகளின்போது, கூறியுள்ளது. எனவேதான் அரசுகள் பந்த்களுக்கு நேரடியாக ஆதரவு அளிப்பதை நிறுத்திவிட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.