ஆர்.கே.நகர் தேர்தல் தேதியில், 2ஜி வழக்கின் தீர்ப்பு! திமுக வெற்றி வாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா?
சென்னை: இழுத்துக்கொண்டேயிருந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு தேதி இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள டிசம்பர் 21ம் தேதி, அந்த தீர்ப்பு வெளியாக உள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
இதை தொடர்ந்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு இருந்ததால் அவற்றைப் படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பை எழுதும் பணியில் ஈடுபடுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார்.

2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஷைனி, 2ஜி வழக்கின் தீர்ப்பு, டிசம்பர் 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவித்தார். டிசம்பர் 21ஆம் தேதியன்று, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.

தீர்ப்பு
இந்த தீர்ப்பு 21ம் தேதி வெளியாக உள்ள அதே நாளில், ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தீர்ப்பு காலையில் வெளியாகும் நேரத்தில் கால்வாசி அளவுக்கான வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

திமுகவுக்கு ஓட்டு
தீர்ப்பு குற்றம்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக வந்தால் அது திமுக வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் 2ஜி வழக்கு பல ஆண்டுகாலம் முன்பு ஆரம்பித்தது. அதன் தாக்கம் ஆர்.கே.நகரில் மிக அதிகமாக எதிரொலிக்காது என்றே தெரிகிறது. ஆனால் ஓரளவுக்கு நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வாக்காளர்கள் அந்த தீர்ப்பின் அடிப்படையில் தங்கள் முடிவை மாற்றுவார்கள் என கூறப்படுகிறது.

2ஜி வழக்கால் பாதிப்பிருக்காது
இதே லாஜிக் 2ஜி வழக்கின் தீர்ப்பு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வந்தாலும் நடைபெறும். அப்போதும் இதை வைத்து திமுகவுக்கு வாக்களிப்போர் சொற்ப எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். இப்போது தமிழகத்தில் என்ன நிலை உள்ளது என்ற கேள்வியே ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்களிக்க செல்வோர் மனதிலல் ஓடும் எண்ணமாக இருக்கும் என்பதால் 2ஜி வழக்கின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என்றே தெரிகிறது.

தகுதியான வேட்பாளர்
ஏனெனில் 2ஜியில் திமுகவுக்கு பாதகமான தீர்ப்பு வந்தாலும், அதற்கு மாற்றாக யாருக்கு வாக்களிக்க போகிறோம், அவர்கள் எப்படிப்பட்ட தகுதியானவர்கள் என்பது குறித்து மக்கள் சிந்திப்பார்கள். அப்படி தகுதியான வேட்பாளர் யார் உள்ளார்கள் என்பதை வைத்தே 2ஜி வழக்கின் தீர்ப்பு ஆர்.கே.நகரில் திமுகவுக்கு சாதகம் தருமா, பாதகம் ஏற்படுத்துமா என்பது தெரியவரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications