திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. வெற்றி யாருக்கு.. ஆர்கே நகர் பாணி அதிர்ச்சி வைத்தியம் வெய்ட்டிங்?
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினர் ஏ.கே.போஸ் மரணமடைந்துள்ள நிலையில் அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எந்த மாதிரியான போட்டி இருக்கும் என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சீனிவேல், பதவியேற்கும் முன்பே உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
இதனிடையே நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார் ஏ.கே.போஸ்.

6 மாதங்களுக்குள் தேர்தல்
ஒரு தொகுதியில் எம்எல்ஏ மறைந்து விட்டால், ஆறு மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக, தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை இத்தொகுதிக்கு உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலை திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை சந்திக்க உள்ளனர்.

அதிமுகவுக்கு பின்னடைவு
ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக வெற்றி பெற முடியவில்லை. வழக்கமாக ஆளும் கட்சிகளே பெரும்பாலான இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நிலையில், ஆர் கே நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

தினகரன் மீது எதிர்பார்ப்பு
திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தினகரன், ஆர்கேநகர் போலவே அதிரடி காட்டி வெற்றி பெற முயற்சி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்கேநகரிலாவது தினகரன் சுயேச்சை. இப்போது அவர் ஒரு கட்சியையும் உருவாக்கி துணை பொதுச்செயலாளராக உள்ளார். முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர் ஏ.கே.போஸ். திருப்பரங்குன்றம் தொகுதியில் கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. எனவே தினகரன் தனது அணியில் உள்ள வைகை செல்வன் போன்ற பிரபலமான முக்குலத்து வேட்பாளர் ஒருவரை நிறுத்த செய்து, ஆர்கேநகர் பாணியில் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி அளிக்க கூடும் என்ற பேச்செல்லாம் அரசியல் வட்டாரத்தில் எழுகின்றன.

தீர்ப்பை பொறுத்து திட்டம்
ஆனால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, தற்போது உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இந்த மாத தொடக்கத்திலேயே நிறைவு பெற்று தீர்ப்பும் இம் மாதத்திலேயே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த தீர்ப்பு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சாதகமாக வந்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் சார்பில் வேட்பாளரை களமிறக்க தேவையில்லாத சூழல் உருவாகும்.

நேரடி போட்டிதானா
இப்படியான சூழலில், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் நடுவே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அந்த தொகுதியில் பொது தேர்தலின் போது போட்டியிட்ட திமுக வேட்பாளரான டாக்டர் சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் எப்படியான கோல்மால்கள் நடந்தன என்பது நாட்டுக்கே தெரியும். மீண்டும் ஒரு இடைத் தேர்தலால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications