தேர்தலில் மு.க. அழகிரியின் ஆதரவோடு வெல்வோம்: காங்கிரஸ் நம்பிக்கை
மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் மு.க அழகிரியின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய்பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இது தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. 40 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 1,200 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆரூண் எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். அழகிரி காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளார். அவரது ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்.
இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் போட்டியிடவில்லை என்பது தவறு. அவர்கள் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள். அதனால் இளைஞர்களுக்கு வழிவிட்டுள்ளனர் என்பதே உண்மை என்றார்.