சீசனே முடியலை.. ரெஸ்ட் எடுக்கும் காற்றாலைகளால் மின்வெட்டு பீதி
நெல்லை: சீசன் முடிவடையாத நிலையில் காற்றாலைகளின் மின் உற்பத்தி குறைந்து போயிருப்பதால் பல மணிநேர மின்வெட்டு மீண்டும் அமலுக்கு வருமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரல்வாய்மொழி, தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 10,000க்கும் மேற்பட்ட காற்றாலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மொத்த நிறுவு திறன் 7, 300 மெகா வாட்.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி காலம். இப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 கொடுத்து வாங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்றின் வேகம் குறைந்து வருவதால் சீசன் முடிவடைவதற்கு முன்பே காற்றலை மின் உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது. தற்போது காற்றாலை மூலம் கடந்த 3 நாட்களாக 500 முதல் 700 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது.
இதுவே கடந்த வாரத்தில் 100 மெகா வாட் என்ற நிலையில் கூட இருந்தது. தற்போது கூடங்குளத்தில் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல வடசென்னை 600, எண்ணூர் 300 மெகா வாட் என தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1450 மெகா வாட் மின்சாரம் கிடைக்காமல் முடங்கியுள்ளது. இதனால் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பீதி எழுந்துள்ளது..