ஜீயருக்கு ஆதரவு... உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி... ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜயகாந்த்
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். ரஜினி, கமலின் அரசியல் பயணத்தை பொருத்தவரை எனக்கு அவர்கள் ஜூனியர்கள் என்றும் நான்தான் சீனியர் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.
பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கோரி சிவகாசி பாவடிதோப்பு திடலில் இன்று விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தனது மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றிருந்தார். அங்கு ஆண்டாளை தரிசனம் செய்தார். அப்போது தனது குடும்பம், கட்சி மற்றும் நாட்டு மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று அர்ச்சனை செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆண்டாள் குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளேன்.
அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள ரஜினியும் கமலும் எனக்கு ஜூனியர்கள், நான்தான் சீனியர் என்று விஜயகாந்த் தெரிவித்தார். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்துார் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஜீயருக்கும் ஆதரவை தெரிவித்து உள்ளார்.