எங்க தயவு இல்லாம யாரும் ஆட்சிக்கு வரமுடியாது!... சொல்வது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
திருப்பூர்: தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் அதிரடி பேச்சுக்கள் அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்தாலும், அவரது அதிரடி தொடர்கிறது. திருப்பூரில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கப் போவதாகவே பேசி வருகின்றனர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் இதை கூறியே பிள்ளையார் சுழி போட்டார்.
தமிழகத்தில் பாஜகவும் அ.தி.மு.க.வும் கைகோர்க்க போகிறது. இது ஜெயலலிதா விடுதலையினால் மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.
ஊழல் மலிந்த ஆட்சி
தமிழகத்தில் போக்குவரத்து துறை மற்றும் பொதுப்பணித்துறைகளில் பலகோடி ரூபாய் ஊழல்கள் நடந்துள்ளது. இது குறித்த தகவல்களை அதன் ஊழியர்களே வெளியிட்டுள்ளனர்.
எங்க ஆதரவு இல்லாமல்
தமிழக மக்கள் விழிப்படைந்து விட்டனர். இதனால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
மத்திய அரசு சரியில்லை
மாநில அரசை தாக்கிய அவர், மத்திய அரசை சாடினார், தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோத போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
ஏழைகளுக்கு எதிரான சட்டம்
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. ஆனால் பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கிறது. மேலும், தற்போது கொண்டு வர உள்ள குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தம் ஏழைகளுக்கு எதிரான சட்டமாகும்.
மோடி பயணம்
பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டிற்குள் 13 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இதனால் இந்திய மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
4 கலர்களில் உடைகள்
தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்கு வாழும் இந்தியர்களின் நிலை பற்றியோ, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை பற்றியோ பேசப்படவில்லை. ஆனால் 4 நிகழ்ச்சிகளிலும் 4 விதமான உடைகளிலே கலந்து கொண்டு அசத்தியுள்ளார் என்று கூறினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.