கள்ளக்காதல் மோகம்.. தொல்லையாக தெரிந்த மகன்.. சூடு வைத்து வெறித்தனம் காட்டிய தாய்!
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற மகனுக்கு உடலெங்கும் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் தலைவிரித்தாடுகிறது. இதில் கொலைகள் விழுகின்றன. சித்திரவதைகளும் தொடர்கின்றன.
மதுரை அருகே திருமங்கலத்தில் இப்படித்தான் ஒரு பெண் தனது கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற மகனை சூடு வைத்து சித்திரவதை செய்து கைதாகியுள்ளார். அப்பெண்ணின் பெயர் மாரீஸ்வரி. 27 வயதான இவரது கணவர் பெயர் செந்தில்முருகன். இவர்களுக்கு பாவனா என்ற 8 வயது மகளும், 6 வயதில் விஸ்வா என்ற மகனும் உள்ளனர்.
செந்தில் முருகன் ஏற்கனவே இறந்து விட்டார். தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் மாரீஸ்வரி. இந்த நிலையில் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது மாரீஸ்வரிக்கு. இது கள்ள உறவாக மாறியது.
இதை அறிந்த மாரிஸ்வரியின் தந்தை அவரைக் கண்டித்தார். ஆனால் அதனால் ஆத்திரமடைந்த மாரீஸ்வரி தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இனி நிம்மதியாக கார்த்திக்குடன் உறவைத் தொடரலாம் என நினைத்தார். ஆனால் அவரது இரு குழந்தைகளும் அவரது கண்களுக்கு பெரும் இடையூறாக தெரிந்தனர்.
மேலும் கார்த்திக்கும், மாரீஸ்வரியின் குழந்தைகளைக் கண்டாலே வெறுத்தார். இருவரும் சேர்ந்து அடித்துள்ளனர். இதில் மாரீஸ்வரியின் செயல்தான் மோசமாக இருந்துள்ளது. மகன் உடம்பு முழுவதும் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார் மாரீஸ்வரி.
எதேச்சையாக தனது பேரனைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்த மாரீஸ்வரியின் தந்தை பேரனின் உடல் முழுவதும் சூடு இருப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார். உடனடியாக அவனை கூட்டிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்த அவர் போலீஸிலும் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் மாரீஸ்வரியைக் கைது செய்தனர். கார்த்திக் ஓடி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.