ரேசன் கார்டு தராததால் ஆத்திரம்.. மனைவியை வழிமறித்து வெட்டிக் கொன்ற கணவன்
திருச்சி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி: விராலிமலை அருகே இன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து கணவன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விராலிமலை அருகே உள்ள கத்தலூர் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் எம். கருப்பையா(70) இவர் தெய்வானை(60), நாகம்மாள்(28) என இரண்டு மனைவிகள். அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து உள்ளார்.

இந்நிலையில், தனித்தனியாக வசிக்கும் இவர்கள் ஒரே ரேசன் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். மாதம் ஒருவர் குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்கி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தெய்வானையிடம் இருந்த ரேசன் கார்டை கடந்த டிச, 19-ம் தேதி நாகம்மாள் வாங்கி வந்து விட்டாராம்.
இதையறிந்த கருப்பையா ரேசன் கார்டை ஏன் வாங்கினாய் என கேட்டு நாகம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாகம்மாள் இன்று 100 நாள் திட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீரம்பட்டி அருகே நாகம்மாளை வழிமறித்த கருப்பையா தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் நாகம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே நாகம்மாள் உயிரிழந்தார்.
தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பையாவை கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications