காதலில் தோல்வி... திருமணத்திற்கு மறுத்த காதலர்.. தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்
சென்னை: சென்னையில் காதலித்து வந்த காவலர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததால் பெண் காவலர் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை பரங்கிமலை ஆயுதப் படையில் காவலராக உள்ளவர் மெர்சி. இவரும், சக காவலர் பாஷா என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். சமீப காலமாக பாஷா விலகிப் போக ஆரம்பித்துள்ளார். இதனால் பயந்து போன மெர்சி, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு பாஷாவை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள், காவல்துறை ஆணையர் வரை புகார் கொடுத்தார் மெர்சி. ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த மெர்சி, தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டார். ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்ட குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சக காவலர் காதலித்துக் கைவிட்டு விட்டதால் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றது சென்னை காவல்துறையினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.