காதலித்து ஏமாற்றிய ஏட்டு: பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை
நெல்லை: நெல்லை அருகே திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரரால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமு. அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது அவருக்கும் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிந்த அருமைநாயகத்துக்கும் காதல் ஏற்பட்டது. அருமைநாயகத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது. ஆனால் இதை மறைத்து ராமுவுடன் அவர் நெருங்கி பழகினார்.
பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ராமுவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு அவர் அருமைநாயகத்திடம் தெரிவித்தார். ஆனால் அவர் சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அருமைநாயகத்திற்கு திருமணமாகி குழந்தை இருப்பது ராமுவுக்கு தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த அவர் இதுபற்றி அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பேசுவதை தவிர்த்தார். இதனால் மனமுடைந்த ராமு ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் ஏட்டாக இருந்த அருமைநாயகத்திற்கு எஸ்ஐ பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் ராமு அவர் மீது புகார் அளித்ததால் அவரை சென்னைக்கு பயிற்சி அனுப்பாமல் உயர் அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் தனது வேலைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த அவர் ராமுவை சந்தித்து சமாதானப்படுத்தி புகாரை வாபஸ் வாங்கினார். ஆனால் அவர் ராமுமை திருமணம் செய்ய மீண்டும் மறுக்கவே சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அருமைநாயகம் மீது வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி அருமைநாயகத்தின் மீது அம்பை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமு நேற்று மாலை விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.