ஹெல்மெட் போடலை.. சரியான போதை வேற.. இளைஞர் போட்ட பிரேக்.. கீழே விழுந்த அம்மா.. பரிதாப மரணம்!
போலீஸாரின் வாகன தணிக்கையில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
Recommended Video
விருத்தாசலம்: "ஹெல்மட் போடல.. குடிபோதை வேற.. இளைஞர் பிரேக் போட்ட அதிர்ச்சியில்தான் அவரது அம்மா கீழே விழுந்து இறந்துவிட்டார்" என்று கள்ளக்குறிச்சி போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் தீயணைப்புத்துறை ஆபீஸ் அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செந்தில்குமார் என்ற 23 வயது இளைஞர் பைக்கில் வந்தார். இவர் உலகங்காத்தான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். பைக்கில் அவருடைய அம்மா ஐயம்மாளை உட்கார வைத்து போய் கொண்டிருந்தார். ஆனால், செந்தில்குமார் ஹெல்மெட் போடவில்லை என்பதால் போலீஸார் அவரை மறித்தனர்.

ஐயம்மாள்
ஆனாலும் பைக்கை நிறுத்தாமல் அவர் சென்றுள்ளார். அதனால் அங்கிருந்த ஒரு போலீஸ்காரர், கையில் இருந்த லத்தியை அவர் மீது வீசியுள்ளார். ஆனால், அது செந்தில்குமார் மீது படாமல், பின்னால் உட்கார்ந்திருந்த ஐயம்மாள் மீது பட்டுவிட்டது.

படுகாயம்
இதில் நிலை தடுமாறி தாயும் - மகனும் பைக்குடன் கீழே விழுந்துள்ளனர். இதில் ஐயம்மாள் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்த போலீஸார் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

மறியல்
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், லத்தியை வீசி கொன்ற போலீஸ்காரரின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் குதித்தனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியை பெரிய அளவுக்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. தகவலறிந்து டிஎஸ்பி ராமநாதன் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. போராட்டமும் கைவிடப்பட்டது.

ஹெல்மட்
ஆனால், போலீசார் தரப்பில் இதை பற்றி சொல்லும்போது, "பைக்கில் வந்த செந்தில்குமார் ஹெல்மட் போடவில்லை, மதுபோதையில் அவர் இருந்தார்.. அதனால்தான் பைக்கை உடனே அவரால் நிறுத்த முடியாமல் தடுமாறினார். பிறகு பிரேக் வேகமாக பிடித்த அதிர்ச்சியில்தான் பைக்கில் இருந்து அவரது அம்மா தவறி விழுந்துவிட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் உயிர் பிரிந்துவிட்டது. இதனால் செந்தில்குமாரை கைது செய்துள்ளோம்' என்றனர்.

இடமாற்றம்
எனினும், இது சம்பந்தமான விசாரணை போலீசார் தரப்பில் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் வேல்முருகன், மணி, இளையராஜா, செல்வம், சந்தோஷ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தர விட்டார்.












Click it and Unblock the Notifications