தூத்துக்குடியில் பரிதாபம்.. ஆலைக் கழிவில் சிக்கி பெண் பரிதாப மரணம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொழிற்சாலை ஆலைக் கழிவில் சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக காலமாகிவிட்டார். இவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.
தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக சாந்தி கழிவு காகிதங்கள் எடுத்து அதன்மூலம் பெறும் வருமானத்தில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குப்பைகளை சேகரித்துள்ளார் அப்போது அப்பகுதியில் இருந்த மணல் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும்போது அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த நச்சு மணலில் கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சாந்தி தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து சாந்தியின் உறவினர்கள் பலியான சாந்தியின் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்பதை வலியுறுத்தினர். இதனையடுத்து தனியார் ஆலை நிர்வாகம் பலியான சாந்தியின் குழந்தைகளுக்கு ரூ3லட்சம் நிவாரணம் வழங்க முன்வந்தது.
இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.