சென்னை: மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி; பசுமாடும் பலியான சோகம்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்ததால் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். அவர் அழைத்துச் சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து பலியானது. இதேபோல கல்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியாசர்பாடியைச் சேர்ந்த லட்சுமி மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு வியாசர்பாடியில் பகுதிகளில் உறவினர் ஒருவரின் வீட்டு கிரகப்பிரவேசம் ஒன்றில் பங்கேற்க தன்னுடைய பசுமாடு, கன்றுக்குட்டியை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை பசுமாடு மிதித்தது. அப்போது மின்சாரம் பாயவே, துடிதுடித்து விழுந்தது. பசுமாட்டினை காப்பாற்றுவதற்காக போன லட்சுமி, மாட்டின் கயிற்றினை கட்டி இழுத்தார். அப்போது லட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லட்சுமியின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
வியாசர்பாடி பகுதியில் இருபது நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.
சேதமடைந்த மின்கம்பியை சீரமைக்க கோரி அழைத்தால் மின்வாரியத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்கதாகவும் அந்தப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்பாக்கத்தில் பெண் மரணம்
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே தென்பட்டினம் கிராமத்திலும் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆவடி, காந்தி நகர் சர்ச் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் பொன்நிலவன் (16). தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பொன்நிலவன் சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த கணினியை இயக்க மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பொன்நிலவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். தகவலறிந்த ஆவடி போலீஸார் பொன்நிலவனின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
5 பேர் உயிரிழப்பு
சென்னையில் வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மின்சாரம் தாக்கி பலியாகினர். அந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே தற்போது வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் இதுவரை மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே உயிரிழப்பு நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.