அதிமுக மேடைப் பேச்சாளரின் மகளை ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக வாலிபர் மீது புகார்
தூத்துக்குடி: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்குக் கூட்டிச் சென்று உறவு கொண்டு ஏமாற்றி விட்டதாக, அதிமுக மேடைப் பேச்சாளரின் மகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.
காயல்பட்டணம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் மகராசி கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:

நான் மேற்கண்ட முகவரியில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனது தந்தை முருகன் அதிமுக மேடை பேச்சாளராக இருந்து வருகிறார். எங்கள் பகுதியிலுள்ள தனியார் கேபிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயல்பட்டணத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவருடைய மகனான வெற்றிவேலும் நானும் கடந்த 3வருடங்களாக காதலித்து வந்தோம்.
வெற்றிவேல் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு என்னை அழைத்து சென்றுள்ளார். இதனால் நான் கர்ப்பிணியானேன். 5 மாத கர்ப்பிணியான நான் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெற்றிவேலிடம் வலியுறுத்தினேன். இதனைக்கேட்ட வெற்றிவேல் எனது சகோதரிக்கு திருமணம் ஆனவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி கூறினார்.
அத்துடன் என்னை கடந்த மாதம் மார்த்தாண்டம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று என் கர்ப்பத்தையும் கலைத்து விட்டார். அதன்பின்னர் வெற்றிவேல் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து நான் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
இருந்தபோதும் காயல்பட்டணத்திலுள்ள வெற்றிவேலின் நண்பரான பா.ஜ.க பிரமுகரால் வெற்றிவேல் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த என்னை அந்த பிரமுகர் மிரட்டியும் வருகிறார்.
எனவே அந்த பிரமுகர் மீதும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை ஏமாற்றிய வெற்றிவேல் மீதும் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications