ஒரு கோழிக்காக சண்டை.. பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குடிகாரன் கைது!
திருச்செந்தூர்: ஒரு கோழிக்காக நடந்த சண்டையில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் அருகே உள் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா (40). திங்கள்கிழமை இரவு இவர் கொடூரமாக கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரான 52 வயது பாண்டியைக் கைது செய்தனர்.
ஜெயா தனது வீட்டில் கோழி வளர்த்து வந்தார். அதில் ஒரு கோழியை பாண்டி திருடி விட்டதாக தெரிகிறது. இதையறிந்து ஜெயா அவருடன் சண்டைக்குப் போயுள்ளார். அப்போது நல்ல குடிபோதையில் இருந்த பாண்டி, ஆத்திரத்தில் ஜெயாவை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு ஓடி விட்டார்.
தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாண்டியை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.