பெரம்பலூரில் பரபரப்பு... பணி சுமை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்
பணிசுமை காரணமாக பெரம்பலூரில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை முயன்றுள்ளார்.
பெரம்பலூர்: பெரம்பலூரில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி தாங்காமல் பெண் போலீஸ் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ரெங்கநாயகி. இவர் குடும்பத்துடன் பெரம்பலூரில் வசித்து வருகிறார்.
தினம்தோறும் கடுமையான பணி வழங்குபடுவதாகவும், ஓய்வு, விடுமுறை எதுவும் வழங்காமல் அதிகாரிகள் வேலை நிமித்தமாக டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ரெங்கநாயகி வீட்டில் தெரிவித்து வருத்தப்பட்டு புலம்பிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மன உளச்சலில் இருந்த ரெங்கநாயகி, அதிகமான தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரெங்கநாயகி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கூடுதல் காவல்கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.