காரைக்கால்: கத்தி முனையில் பெண் பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது!
காரைக்கால்: காரைக்காலில் கடற்கரையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்காலில் உள்ள ஒரு கல்லூரி கேன்டீனில் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாக மாலதி, கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவருக்கும், மாலதிக்கும் இடையே காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் அவர்கள் இருவரும் காரைக்கால் கடற்கரையில் யாரும் இல்லாத ஒதுக்குபுறமான இடத்தில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இதை பார்த்திருக்கின்றனர். உடனே அந்த வாலிபர்கள், உங்களை போலீசார் விசாரிக்க கூப்பிடுகிறார்கள் என்று அவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.
இதை உண்மை என்று நம்பி அவர்களும் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மாலதியுடன் வந்த வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.
பின்னர், மாலதியை மட்டும் அருகில் உள்ள பாலத்துக்கு அடியில் தூக்கி சென்றுள்ளனர். அங்கு, 2 வாலிபர்கள் பாலத்துக்கு மேலே நின்று கொண்டிருக்க, ஒருவர் மாலதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் மற்றொரு வாலிபர் மாலதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது மாலதி கூச்சலிட்டுள்ளார். ஒரு பெண் கூச்சலிடும் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள ஒருவர் கடலோர காவல்படை போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் விரைந்து வந்து அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, 2 பேர் மட்டும் கடலோர காவல் படையினரிடம் பிடிபட ஒருவர் மட்டும் தப்பி ஓடி இருக்கிறார்.
இருவரையும் காரைக்கால் போலீசில் ஒப்படைத்த கடலோர காவல் படையினர், மாலதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிடிபட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகப்பட்டினம் அருகே உள்ள அக்கரை பேட்டையை சேர்ந்த ஜெயபால் (24), பிரசாந்த் (22) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த சீனா என்று தெரிய வந்துள்ளது.
இவர்கள் 3 பேரும் நண்பர்கள் என்றும், மாலதியை முதலில் ஜெயபாலும், அடுத்து பிசாந்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது. தற்போது, தப்பி ஓடிய சீனாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவருவதாக பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.