பஸ்சில் பாலன்ஸ் தவறி தெரியாமல் தொட்டு விட்ட சிறுவன்.. சரமாரியாக அடித்த பெண் எஸ்.ஐ.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பஸ்சில் பயணித்த சிறுவன், பாலன்ஸ் தவறி, கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக அருகில் மப்டி உடையில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரைப் பிடித்து விட்டான்.
இதனால் கோபமடைந்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் சிறுவன் என்றும் பாராமல் அவனை சரமாரியாக அடித்ததால் மக்கள் கொந்தளித்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காரமண்டபம் அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்நதவர் முத்துசாமி. கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா. இவர் இலவச சீருடை தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை இதற்கான துணிகளை வாங்குவதற்காக தனது மகன் விஷ்ணுதாசுடன் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். இவரது மகன் விஷ்ணுதாஸ் மூலச்சலில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷ்ணுதாஸ் பஸ்சின் முன்பக்கம் நின்று கொண்டிருந்தான். தக்கலை அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறிய சிறுவன் விஷ்ணுதாஸின் கை அருகில் இருந்த பெண்ணின் மேல் பட்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரம் அடைந்த அந்த பெண் சிறுவன் என்றும் பாராமல் அடித்து உதைத்தார். இதை தட்டி கேட்ட தாய் சரோஜாவிடம் நான் யார் தெரியுமா. சப் இன்ஸ்பெக்டர், என்னிடம் பேசினால் தொலைத்து விடுவேன் என்று எச்சரித்தார்.
இதற்கிடையே பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சை கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தினர். இதனை பார்த்த அந்த பெண் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். இதனை எதிர்பாராத சக பெண் பயணி ஒருவர் அவரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அவர் தனது பேக்கில் இருந்து கத்தியை எடுத்து தனது கையை கீறிக்கொண்டார். உங்களை கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து உடனடியாக நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவரது தாயாரையும் மட்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகாரை எழுதி வாங்கினர். முதல் கட்ட விசாரணையில் அடித்தவர் பெண் எஸ்ஐதான் என்பதும், அவர் தற்போது லஞ்ச வழக்கில் சஸ்பெண்டில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications