சென்னை ஓட்டேரியில் பரிதாபம்.. வீட்டில் தேங்கிய மழை நீரில் வழுக்கி விழுந்து பெண் பலி
மழை நீரில் வழுக்கி விழுந்து பெண் பலியானார். ஓட்டேரியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை : ஓட்டேரியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் வழுக்கி கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தாயை இழந்த சோகத்தில் நான்கு பிள்ளைகள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னை ஓட்டேரி சுப்பராயன் 4 வது தெருவிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

இந்நிலையில் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்பளத் தொழிலாளி மருதமுத்து என்பவரின் வீட்டிலும் மழைநீர் புகுந்துள்ளது. மருதமுத்து அவரது மனைவி பவுனாம்பாள் மற்றும் நான்கு குழந்தைகள் வேறு வழி இல்லாமல் தண்ணீர் வடியும் என்று வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில் தேங்கியிருந்த மழைநீரில் வழுக்கி கீழே விழுந்த அவர் மனைவி பவுனாம்பாள் என்பவர் பின்னந்தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அவரது குடும்பத்தினர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பவுனாம்பாள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஓட்டேரி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்த பவுனாம்பாளுக்கு 2 பெண் குழந்தைகளும் 2 மகன்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications