சென்னையில் பெண்கள் மது குடிக்கும் போராட்டம்! தாலியில் பாட்டில்களை தொங்கவிட்டனர்
சென்னை: மதுபான கடைகளை மூடக்கோரி, சென்னையில் பெண்கள் மதுபான பாட்டில்களை வாங்கி தாலியில் கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்திலுள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில், சமூக பொருளாதார வளர்ச்சி கடல் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஆக்னஸ் தலைமையில் சுமார் 100 பெண்கள் இன்று காலை 10 மணி அளவில் திரண்டனர்.

பின்னர் மதுபான பாட்டில்களை தங்கள் தாலிகளில் கட்டி தொங்கவிட்டபடி, தங்கள் தாலிக்கு இந்த மதுவால் ஆபத்து வந்துவிட்டது என்று அவர்கள் கோஷமிட்டனர். மேலும், ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் குடிக்க உரிமையுள்ளது என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மதுவிலக்கு போராளி சசிபெருமாள் மரணமடைந்ததை தொடர்ந்து கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய மதுவிலக்கு போராட்டம் பெரும் வன்முறையில் சென்று முடிந்தது.

சென்னையில் நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடை மீது கல்லெறிந்தனர். பதிலுக்கு போலீசார் அவர்களை அடித்து உதைத்தனர். இந்நிலையில், இன்று பெண்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர் கூறுகையில், "என் கணவர் சொல்பேச்சு கேட்காமல் குடிக்கிறார். எனவேதான் வீட்டை திருத்துவதை விட்டுவிட்டு நாட்டையே திருத்த கிளம்பினேன். என் சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி என இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஆணுக்காகவும் போராடுகிறேன். மதுவால் எனது தாலிக்கு பாதுகாப்பு இல்லை. மது விலக்கு அமலாகும் வரை போராடத்தான் செய்வேன். இல்லாவிட்டால், நானும் குடிப்பேன். யாரும் கண்டுகொள்ள கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications