பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைகிறது - சாகும்வரை உண்ணாவிரதம்
பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், ஆலைகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கிழக்குத் தாம்பரத்தில் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Recommended Video
சென்னை: பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு பட்டாசுத் தொழில், தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராசா தலைமையில் சென்னை கிழக்குத் தாம்பரத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், உற்பத்திக்கான ஆர்டர்கள் கிடைக்காமல் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தொடர்ந்து பல நாட்களாக பட்டாசு ஆலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும். இத்தொழிலில் நேரடியாகவும், அச்சு, அட்டைப்பெட்டி, காகிதம், அட்டை குழாய்கள் தயாரித்தல், லாரி, சுமைப்பணி உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்தும் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
தொழிலாளர்கள் பாதிப்பு
வேலைக்கு ஆட்கள் போதாமல் தவித்து வந்த சிவகாசியில் கடந்த 3 வாரங்களாக வேலையில்லாமல் கடும் சிரமத்தை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிக்கு கட்டணம் கட்ட முடியவில்லை. குடும்பம் நடத்தக்கூட வழியில்லாமல் தவிப்பதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
பட்டாசு ஆலைகள் மூடல்
பட்டாசுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே சமயம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்- 1989 பிரிவு 3-பியில் மற்ற நாடுகளில் உள்ளதைப் போல பட்டாசுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போராட்டம்
பட்டாசு ஆலைகளை அடைத்து உற்பத்தியாளர்கள் நடத்தும் தொடர் போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்காததால், ரயில் மறியல், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க பட்டாசுத் தொழிலாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
சாகும் வரை உண்ணாவிரதம்
தமிழ்நாடு பட்டாசுத் தொழில், தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராசா தலைமையில் சென்னை கிழக்குத் தாம்பரத்தில் இன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டதைப் போல பட்டாசுத் தொழிலைக் காக்கவும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பட்டாசு ஆலை நிர்வாகிகளும், பட்டாசுத் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாராமுகம் ஏன்
பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், ஆலைகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.