இன்னிக்கு "இட்லி" தினம் பாஸ்.. காலையில என்ன சாப்ட்டீங்க?
சென்னை: அந்த தினம், இந்த தினம் போல என்று இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். அப்படிப்பட்ட "சூப்பர் டூப்பர் புட்" இட்லி.
காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. கூடவே கெட்டிச் சட்னியும், கொஞ்சம் சாம்பாரும் கூடவே கடித்துக் கொள்ள வடையும் வைத்து விட்டால் ஆஹாஹா. ஓஹோஹோ என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடலாம்.

அடிச்சுக்கே ஆளே இல்லை
எந்த உணவாக இருந்தாலும் சரி, இட்லியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த உணவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு இட்லியும் சாம்பார், சட்னியும் இல்லாவிட்டால் அன்றைய நாள் பெரிய சோக நாள்தான்.

ஜீரணிக்கக் கூடியது
எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் சரி மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும். இதனால்தான் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளின்போது இட்லி சாப்பிடச் சொல்கிறார்கள்.

குப்புன்னு உப்பலாக
இப்போதெல்லாம் விதம் விதமான இட்லி வந்து விட்டது. குஷ்பு இட்லி என்று கூட பெயர் வைத்து கொண்டாடி குதூகலமாக சாப்பிடும் பரம்பரை நமது தமிழ்நாட்டுப் பரம்பரை.

இட்லி தினம்
ஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக சமீப ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் இதுதொடர்பாக பிரமாண்ட விழா வைத்தனர். 50 கிலோ இட்லியை கத்தியால் வெட்டி கொண்டாடினர்.

விதம் விதமான இட்லிகளுடன் கண்காட்சி
இந்த முறையும் சென்னையில் வித்தியாசமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஆண்டு இட்லி தினத்தை பிரமாதமாக கொண்டாடிய அதே கண்ணதாசன் நகர் "இட்லி கிங்" இனியவன்தான் இந்த முறை பிரமாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மல்லிப்பூ இட்லி
இனியவன் விதம் விதமான இட்லிகளை தயாரிப்பதில் கில்லாடியாவார். கடந்த 10 வருடமாக இட்லி விற்பனையில் கிங்காக இருந்து வருகிறார். இவரது மல்லிப்பூ இட்லி ரொம்பப் பிரபலமானது. தமிழகத்தின் பிரபலமான இட்லி வியாபாரிகளில் இனியவனுக்கு முதலிடம் உண்டு.

2000 வகை இட்லிகள்
இந்த ஆண்டு இனியவன் நடத்திய கண்காட்சியில் 2000க்கும் மேற்பட்ட இட்லிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது கடந்த ஆண்டை விட ஆயிரம் இட்லி அதிகமாகும்.

விதம் விதமாக
தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும், பல்வேறு விழிப்புணர்வுகள் சம்பந்தமாகவும் இட்லி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல உருண்டையாக மட்டும் இல்லாமல் விதம் விதமான டிசைனிலும் இட்லியை வைத்திருந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது.












Click it and Unblock the Notifications