மூத்த பத்திரிகையாளர் ஞாநி காலமானார்! உடல் மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைப்பு!
மூத்த பத்திரிகையாளர் ஞாநி சென்னையில் இன்று காலமானார்.
Recommended Video
சென்னை: மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆங்கில பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஞாநி சங்கரன். 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர் ஞாநி.
தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர் ஞாநி, 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி.
பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார்.
2014-ம் ஆண்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு ஞாநி தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தீவிர அரசியலை கைவிட்டார்.
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் ஞாநி. சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஞாநி காலமானார்.
அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
ஞாநியின் உடலுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஞாநியின் உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.