கொடநாடு எஸ்டேட் பாணி... ஏலகிரியில் துரைமுருகன் பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்- கொள்ளை முயற்சி
ஏலகிரி: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஏலகிரி பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ல் ஒரு கும்பல் நுழைந்து ஆடம்பர கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை முயற்சியில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் பலர் கைது செய்யப்பட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ரூ.200 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நினைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்ததாக போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்த கொள்ளை முயற்சி ஒரு மர்ம சம்பவமாகவே இதுவரை இருந்து வருகிறது.

ஏலகிரி பங்களா
தற்போது கொடநாடு எஸ்டேட் பங்களா கொள்ளை பாணியில் ஏலகிரி மலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் முயற்சித்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

25 ஏக்கர் நடுவில் பங்களா
மேலும் அனைத்து காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் விஐபிகள் ஏலகிரி மலையில் நிலமாகவும் கெஸ்ட் ஹவுஸ் ஆகவும் இடங்களை வாங்கி போட்டுள்ளனர். ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் துரைமுருகனின் பங்களா உள்ளது. 25 ஏக்கர் நிலத்துக்கு மத்தியில் இந்த பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்கு துரைமுருகன் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

காவலர்கள்
இந்த பங்களாவை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த புனிகாந்தூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர். இதே பங்களாவின் ஒரு பகுதியில் தனி அறை கட்டப்பட்டு அங்கு பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் தங்கி இருக்கின்றனர்.

பங்களாவில் கொள்ளை முயற்சி
இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த பங்களாவின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பங்களாவில் பணம், நகைகள் எதும் இல்லாத நிலையில் கட்டில், பீரோ, பிரிட்ஜ் ஆகியவை மட்டும்தான் இருந்துள்ளது. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரத்தில் அடையாளம் தெரிய கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை
இன்று அதிகாலை பங்களாவை சுத்தப்படுத்த வந்த பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து துரைமுருகன் குடும்பத்தினருக்கு முதலில் தகவல் தெரிவித்துவிட்டு ஏலகிரி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் துரைமுருகனின் பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் துரைமுருகனின் இதே பங்களா பகுதியில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications