ஏற்காடு இடைத் தேர்தல்: சேலைகள், ஸ்வெட்டர்கள் பறிமுதல்; அதிமுக அமைச்சர் மீது புகார்
ஏற்காடு: இடைத்தேர்தல் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட, சேலைகள், ஸ்வெட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம், செல்லியம்பாளையம் பகுதியில் மினி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 2,500 சேலைகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது திமுகவினர் புகார் தெரிவித்தனர்.
மின்னாம்பள்ளி அருகேயுள்ள செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு மினி ஆட்டோவை பறக்கும்படை துணை வட்டாட்சியர் வீரப்பன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அந்த ஆட்டோவில் 17 பண்டல்களில் 2,550 சேலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆட்டோ பறிமுதல் செய்து காரிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ஆட்டோவில் வந்த ராஜ்குமார் (வயது-35), ஓட்டுநர் சக்தி (வடது-30) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர் முதல்கட்ட விசாரணையில், அந்த சேலைகளை ஈரோட்டிலிருந்து தருமபுரிக்கு எடுத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
திமுக புகார்
இதனிடையே, செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் எம்.முத்து, காரிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி, அதிமுக பிரமுகர்கள் மெடிக்கல் ராஜா, ரவி ஆகியோர் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு காரில் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, ஒரு ஆட்டோவில் சேலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதை அறிந்ததும் பொதுமக்கள் உதவியுடன் நான் உள்பட திமுகவினர் அந்த ஆட்டோவைப் பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் எங்களை மிரட்டி ஆட்டோவை விடுவிக்கும்படி கூறினர். சம்பவ இடத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டு வரவே, அதிமுக பிரமுகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தச் சேலைகளை ஏற்காடு தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள், பெண்களுக்கு வழங்கி வாக்குச் சேகரிக்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர்.
எனவே இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காரிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்
ஸ்வெட்டர்கள் பறிமுதல்
இதே போல் ஏற்காடு மலைப் பகுதிக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 2,666 ஸ்வெட்டர்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலையொட்டி, பறக்கும் படை வட்டாட்சியர் தமிழ்முல்லை தலைமையிலான குழுவினர் ஏற்காடு அடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்ட போது, அதில் மஞ்சள் நிறத்தில் 2,666 ஸ்வெட்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கார் ஓட்டுநரான ஓமலூரைச் சேர்ந்த செந்தூர்வேலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர், திருப்பூரிலிருந்து ஸ்வெட்டர்களை ஏற்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் ஸ்வெட்டர்களுடன் ஓட்டுநர் செந்தூர்வேலை ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications