பிஞ்சு குழந்தைக்கு மதுவை திணிக்கும் கொடூர தந்தை- வைரலாகும் வீடியோ
சென்னை: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஒரு குடிகார தந்தை திணிக்கும் கொடூர வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் மது குடிக்கும் கலாசாரம் புற்றுநோயைப் போல விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இதனால் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை அருகே, கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள் 3 வயது மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து மதுவை குடிக்க வைத்த தாய்மாமன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுக்கு அவனது தந்தை ஒப்புதலுடன் மது குடிக்க கற்றுத் தருவதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தென்மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரம்.
சட்டசபை தேர்தலில் மதுவிலக்கு
இதனால் சட்டசபை தேர்தலில் மதுவிலக்கு என்பது பிரதான அம்சமாக இருந்தது. அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை வலியுறுத்தியிருந்தன.
படிப்படியான மதுவிலக்கு
இதனால் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்தது. முதல் கட்டமாக 500 மதுபானக் கடைகளை மூடுவதாகவும் மதுபான கடைகளின் திறப்பு நேரத்தை குறைப்பதாகவும் அறிவித்து அமல்படுத்தி வருகிறது.
மேலும் 1,000 கடைகள்
இதனைத் தொடர்ந்து 1000 கடைகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு மாநிலம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடூரமான வீடியோ
இப்படி மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க பெற்ற தந்தையே பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றி கொடுக்கும் ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. பிஞ்சு குழந்தைக்கு பீர், பிராந்தி பாட்டிலை கொடுத்து குடி குடி என கூறுவதும் பீர் பாட்டிலை குழந்தை முன்பாகவே வாயால் கடித்து திறந்து வாயில் திணித்து குடிக்கச் சொல்வதும் இதோ இங்கே பார்...அப்பா எப்படி குடிக்கிறேன் பார் என குடித்துக் காட்டுவதுமான ஒரு கொடுமையான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இத்தகைய கொடூரமான தந்தைகள்தான் வருங்கால தலைமுறையையே அடியோடு நாசமாக்குகிறார்கள்.